Tuesday, May 26, 2009

கடிதம்,- அகதிக்கு அகதி எழுதிக்கொள்வது

அண்மையில் இராமனாதன் முகாமிலிருந்து எனது தங்கை கடிதமொன்றை கொடுத்துவிட்டிருந்தாள். அதிலுள்ள அர்த்தங்களை தினம்தினம் தேடுகிறேன், நொடிக்கொருமுறை ஆயிரம் அர்த்தங்கள் அதனுள்ளே, அந்த அர்த்தங்களுக்குள் பல்லாயிரம் வலிகளும் வேதனைகளும் மடையுடைத்து வெள்ளமாகப்பாய்கிறது. இந்த அண்ணன் என்ன செய்வான் தூரத்தே நின்று அழுகிறேன் என் மொத்த கண்ணீரும் தீர்ந்துபோகட்டும் என்று, இன்னொருமுறை இதிலுமொரு துயர் காண்பேனோ என்று..... இப்பொளுதே கொட்டித்தீர்த்துவிட. ஒரு பரம்பரைக்கே போதுமான மொத்த துயரை இப்போதே கட்டிக்கொடுத்துவிட்டது இந்த யுத்தமெமக்கு என்பதை அங்குபோய் பார்த்ததும் உணர்ந்தேன்.

முகாம், இங்கே மனிதர்களை அடைத்துவைத்திருக்கிறார்கள், பூமியில் மிகவும் கொடிய விலங்கு மனிதன் தான் சந்தேகமில்லை, அதிலும் கொடிய மிருகங்கள் இந்த யுத்தததை முன்னெடுக்க காரணமானவர்களும்,அதை தூண்டியவர்களும் இன்னும் அதன்பால் அக்கறை கொண்டோருமே என்பது புரியும், முகாங்களுக்கும்,வைத்தியசாலைகளுக்குமொருமுறை போய்ப்பாருங்கள்.

இந்தக்கடிதம் அந்தத்துயர்களின் ஒரு பருக்கையை எனக்குள் உணர்த்தியது, இதோ அது

o o o o

அன்பின் அண்ணா
நலம்,உங்கள் நலத்திற்கு இறைவன் என்றும் அருள் புரியட்டும்

மேலும் உங்கள் வொய்ஸ் எல்லாம் மாறிவிட்டது. சந்தோசமாய் இருக்கவும். இளம் பராயத்தை சந்தோசமாக செலவளிக்கிற பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நாங்கள் பட்ட கஸ்ட்டங்கள் எல்லாம் வார்த்தைகளில் அடக்க முடியாதவை.எந்தளவிற்கு துயரத்தித்தினை அனுபவிக்க வேண்டுமோ அந்தளவிற்கு அனுபவித்தோம், கஸ்ட்டப்பட்டோம். சரி அது எல்லாம் போகட்டும் அவை மீட்டுப் பார்க்க முடியாத பக்கங்கள். அத்தானையும் அக்காவையும் கேட்டதாகச் சொல்லுங்கள். டேனுவுக்கும் சதுக்குட்டிக்கும் எங்களை அறிமுகம் செய்துவையுங்கள், என்ன செய்வது பாசத்தை கூட பகிருவதற்கு இங்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே. ம்ம் இந்த உலகின் வேடிக்கையை பாருங்கள் விலங்குகள் சுதந்திரமாய் திரிய ஆரம்பித்து விட்ட காலத்தில் மனிதவேட்டை, மனிதர்கள் பட்டியில் (தொழுவம்). இத்தனை நிகள்ந்ததற்குப் பிறகு சாவதற்கு பயமா,,,, உங்களையும் அத்தானாக்களையும் ஒருக்கா பாத்துவிட்டால் போதும் எண்டுதான் இங்க வந்தனாங்கள். இதெலாசொல்லி உங்களையும் காயப்படுத்தவில்லை, நீங்கள் சந்தோசமாக இருங்கோ, உங்கட பிறந்தநாளுக்கு எங்களுக்கு என்ன ஸ்பெசல்! ம்ம் சும்மாதான் கேட்டனான், வளமை போல அண்டைக்கு நீங்கள் உங்கட நண்பர்களோட சந்தோசமா இருங்கோ அதுதான் எங்கட விருப்பம், எங்கட அண்ணா வீட்ட இருந்த சந்தோசத்தோட எப்பவும் இருக்கவேணும்.

வேற என்ன அண்ணா, அம்மா சரியா மெலிஞ்சிற்றா,அவவுக்கு மருந்தும், மாப்பொட்டியும் வாங்கி கொடுத்துவிடுங்கோ. உங்களை பார்க்கவேண்டும் போல இருக்கு,சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருக்கா வாங்கோ. படிக்கிற ஆர்வமும், ஊக்கமும் இருக்கிறபோது A/L Exam எழுதமுடியாமப் போய்விட்டதே எண்டுதான் கவலை, இப்ப கூட சந்தர்ப்பம் கிடைத்தால் திரும்பவும்படிச்சு எழுதலாம், அதெல்லாம் எம்முடைய கையில் இல்லையே, நடப்பதை பார்க்கலா. ம்ம். சரி அண்ணா, நாங்கள் விரைவில் சந்திப்போம்,நீங்கள் நலமாக இருக்கவும், எனக்கு தலைமயிர் வளரும் வரம்வேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கோ.

நன்றி
இப்படிக்கு
தங்கை

o o o o


எனது
மிகத்துயரமான வரிகள்
மௌனமாகவே இருக்கின்றன
ஒருபிடி
அர்த்தங்களேனும் அடங்கா(த)
சொற்கள் சிலது
முட்கம்பிகளில்
பிடித்து நிற்கின்றன

மரணத்தை விடவும்
கொடியதோர் இரணத்திலிருந்து
மீண்ட வேதனையை
என் கரங்களில்
புதைந்தழுத
என் தாயின்
கண்ணீர் சொன்னது

இன்னும்
முடியவில்லை துயரம்

அம்மா அழுது தீர்த்துவிடாதீர்கள்

பருவம் பருவமாய்
அழிக்கப்படுகிறவர்கள் நாம்
மறந்துவிடாதீர்கள்

6 comments:

ராஜ நடராஜன் said...

சகாராவிலும் ஒரு நாள் புன்னகை பூக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

சந்தனமுல்லை said...

துக்கம் நெஞ்சையடைக்கிறது. தங்கையின் கனவுகள் நனவாகட்டும். முடி வளர என் பிரார்த்தனைகளும்!!

Anonymous said...

ராமநாதன் நலன்புரிநிலையமும் கதிர்காமர் நலன் புரிநிலயமும்தான்
நல்ல நிலையில் பராமரிக்க படுவருகிறது. எனது மருமகன் (என் அக்காவின் மகன்)
வவுனியா வங்கி ஒன்றில் வேலை பார்கிறான் வாரத்தில் மூன்று நாட்கள் ஓவரு
நலன்புரி நிலையங்களுக்கும் சென்று வருவதற்கு அவனுக்கு வேஸிட அனுமதி
வழங்க பட்டுஇருக்கிறது என்னால் முடிந்ததை அவன்மூலமாக அந்த மக்களுக்கு
செய்ய முடிகிறது அந்தமக்களின் நிலைமைகள் என்னால் அர்யமுடிகிறது
மிகமோசம் என்று சொல்வதற்கு இல்லாவிட்டலும் அரசாங்கம் முடிந்தளவிற்கு
செய்கிறது இதில் குழந்தைகள் சிறுவர்கள் தான் மிககவலைக்கு ஊர்யவர்கள்

ப. அருள்நேசன் said...

வாங்க ராஜ நடராஜன்,

//சகாராவிலும் ஒரு நாள் புன்னகை பூக்கட்டும் என வாழ்த்துகிறேன்//

எங்கள் எல்லோருடைய அபிலாசை அதுதானே, ஆனாலும் அதற்கு குறைந்தது 50 வருடங்கள் ஆகலாம். எனது சகாரா இப்போது இன்னொரு ஹீரோஷீமா.

உங்கள் கருத்தும் ராஜ நடைதாங்க ஹா ஹா

ப. அருள்நேசன் said...

எங்க சந்தனமுல்லை அம்மா நீண்ட நாளா இந்தப்பக்கமே காணம்,

//துக்கம் நெஞ்சையடைக்கிறது. தங்கையின் கனவுகள் நனவாகட்டும். முடி வளர என் பிரார்த்தனைகளும்!! //
நன்றி அக்கா,
எனது தங்கைக்காக மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட அத்தனை மக்களுக்காகவும் வேண்டுங்கள்

ப. அருள்நேசன் said...

பெயர் குறிப்பிடாத நண்பரே, முகாம் (அரச நலன்புரிந்னிலையம்) வாழ் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதாக கூறி இருந்தீர்கள், மிகவும் நல்ல விடயம் எல்லோருக்கும் அந்த மனநிலைவராது, அதற்காக எனது பிரத்தியேகமான வாழ்த்துக்கள்

//ராமநாதன் நலன்புரிநிலையமும் கதிர்காமர் நலன் புரிநிலயமும்தான்
நல்ல நிலையில் பராமரிக்க படுவருகிறது.......//

இதிலிருந்து தெரிகிறது நண்பரே, தாங்கள் வெளிநாடொன்றில் வாழ்கிறீர்கள் எனனினைக்கிறேன், நீங்களோ நானோ அங்கே அடைபட்டு சித்திரவதைப்படவில்லையே அப்படியானால் அவர்கள் நல்ல நிலையில்தான் பராமரிக்கப்படுவார்கள்.

மேலும் வவுனியா மக்களின் மனித நேயம் எவ்வளவு பெரியது என்பதையும் உங்கள் கருத்திலிருந்து அறியமுடிகிறது.

எம்க்கு அடிபட்டால் தானே அதன் வலிதெரியும், நண்பரே ஏன் சொல்லமாட்டாங்கள் தனக்கு சுகமும் சொகுசும் கிடைச்சா தன்ர சனத்தையே பாழ்குழியில தள்ளவும் தயங்காதவன் தான் தமிழன் என்பது தெரியாதா, அந்தக்காலத்து தலைவர்கள் முதல் கதிர்காமர் வரை கிண்டிய பாழ்குழியின் மொத்த ஆழம்தான் இந்த பேரழிவு. கடைசியா கிண்டினவன் பிரபாகரன், அதோட அழிஞ்சுது எல்லாம், நீங்க வேறயா கிண்டுங்க கிண்டுங்க. இனி அழிய என்ன கிடக்கு. தமிழன் அழியட்டும் அழியட்டும். அரசுக்கு வால்பிடிச்சுக்கொண்டும் வெளிநாடுகளில இருந்து அறிக்கை விட்டுக்கொண்டும் வாழட்டும் வாழட்டும் தமிழ்.

நண்பரே, உமக்கு ஒன்று தெரியுமா, அங்க சனம் அனுபக்கிற அவலம் மனிதனால் கற்பனை செய்துபார்க்கமுடியாதது. அது உமக்கு டெலிபோனுக்கூடாகவும் தெரியாது. அதுபோகட்டும் பத்தடிக்கு ஒரு கொட்டகை குடிக்கிற தண்ணியில குளியலும் கூட, சாப்பாடு சொல்லவே வேண்டாம், இந்தமக்களை பராமரிக்க ஒரு பிளான் மண்ணாங்கட்டியுமில்லாம அவன்... தமிழன் அழிஞ்சா போதும், போகட்டும்

நண்பரே, இது கோபமில்ல ஆதங்கம் நம்மை நாமே புரியாததன் ஆதங்கம்.