Saturday, July 19, 2008

தாயின் கருவறையிலும் கண்ணீரின் கசிவு




விடியல்

அவளுக்காக காத்திருந்த
நாட்களின் நெடிதுயிர்ப்பை
மரண வாசலில்
சிந்திப்போகிறது காலம்

ஓ என்
நேசக்கரப் பாலைவனங்களே
எம் நெருப்புச் சுனையில் இருந்து
சிந்தி
நீழ்துயில் கொள்ளும்
நித்தியகல்யாணிகளே
உங்கள் கனவுகளின் கருவறை
இன்னும் காலியாகவே
இருக்கிறதா....

காத்திருப்பு
ஒரு யுகத்தை கடந்துவிட்டது
விடியலை சுவீகரிக்கும்
எங்கள் கனவுகளில்
நரம்பு துடிக்க நாருரிக்கும்
வலிகள் - போதும்

நிறுத்துங்கள்
நிறுத்துங்கள்

இன்னும் எவ்வளவு காலம்
காத்திருப்பது
இன்னும் எவ்வளவு காலம்
இழப்பது
இன்னும் எவ்வளவு
இழ இரத்தங்களை
இந்த
மண்ணுக்கிறைப்பது
இன்னும் எத்தனை
உயிர் திரித்து
இந்ததேசத்தை ஒளிர்விப்பது

போதும்
நிறுத்துங்கள்

அவள் வருகிறாளோ இல்லையோ
காத்திருக்க
நாம் மிச்சமிருப்போமா தெரியாது

எங்களுக்கான தேசத்தில்
எங்களுக்கான வானத்தில்
எங்களுக்கான சூரியன் ஒன்று
எழுகிறத்தோ இல்லையோ
காண நாமிருப்போமா தெரியாது

நிறுத்துங்கள்

எங்கள் தாயின்
கருவறையிலும் கண்ணீரின் கசிவு

போதுமப்பா
நிறுத்துங்கள்

குளந்தைகளுக்கு பெற்ரோரே உலகம். பெற்ரோரே காவல். அவர்கள் மீதான நம்பிக்கையே குளந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிள்ச்சியாகவும் வாளவைக்கும் மந்திரம். நம் பெற்றோர்கள் நமக்காக வாள்கிறார்கள், அவர்கள் எமக்கு ந்ல்லதைத்தான் செய்வார்கள், அவர்களை மீறி எந்தத்துயரமும் எம்மை அணுகாது என்ற நம்பிக்கை, அன்பை, பாதுகாப்பை, இன்னும் மகிள்ச்சியை ஆறுதலை குளந்தைகள் பெற்றோரிடம் உணர்வதனாலேயே பால்யப்பருவம் பூந்தோட்டமாக மகிள்ச்சியின் கூடாரமாக இருக்கிறது.

நம் தேசத்தில் இந்த இயல்பு கெட்டுக்கிடக்கிறது. அதனால் தான் "எங்கள் தாயின் கருவறைக்குள்ளூம் கண்ணீரின் கசிவு" என்று எழுதினேன்.

எப்படிச் சொல்வது இந்த இயல்பு எப்படிக் கெட்டதென்று. எங்கள் பிள்ளைகளுக்கு அன்பை தந்தோம் பாதுகாப்பை தரமுடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சி எங்கள் பெற்ரோர் மனங்களை எப்பொளுதோ கொன்றுபோட்டுவிட்டது. மரணத்துக்கான முற்கூட்டிய பதிவு கட்டாயமாக்கப்பட்டதிலிருந்து எம் பிள்ளைகள் சாவின் சாயத்தை முகத்தில் பூசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் புன்னகைத்தாலும் நெஞ்சின் நெருப்பொளிதான் அது.

" அம்மா என்னை விடச்சொல்லுங்கோ, அக்காவை கொண்டுவந்து குடுங்கோ"

"அம்மா அண்ணா பாவம் படிக்கட்டும், நான் போறன், அவனுக்குச் சொல்லாதேங்கோ கவலைப்படுவான். "

இப்படித்தான் எங்கள் குளந்தைகள் குரல், காதுவந்து சேரும். இந்தக் குரலில் இருந்து அன்பை எப்படி அளவிடுவது சொல்லுங்கள், சொல்லிக்கொண்டே சாவை சந்திக்க யாருக்குத்துணிவிருக்கிறது ஆனாலும் அன்பிற்கு, பசத்திற்கு உயிரை விலையாய் எழுதும் அதிசயமும் எங்கள்தேசத்தில் மட்டும்தான் நிகளும்.

இந்தக் குரலில் இரண்டாம் வகை என் தங்கையின் மனக்குரல் என்றால் நான் எப்படி அதிஸ்டக்காறன் என்று என்னைச் சொலிக்கொள்ள முடியும், என் மனச்சாட்சி அரித்து அரித்தே என்னைக் கொல்லுமே, இப்படி அண்ணன்கள் நிலை என்றால் அதை விட மோசம் அம்மாக்கள் நிலை. தான் பெற்ற பிள்ளையில் ஒன்றை சாவில் தள்ள, முடிவுசெய்ய வேண்டும். மகாபாரதத்தில் குந்திதேவிக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது, யாரை அரக்கனுக்கு இரையாய் கொடுப்பதென்று மனச்சஞ்சலத்திலிருந்து இறுதியாக அவள் வீமனை தெரிவுசெய்து அனுப்பியதாக கதை சொல்கிறது.இன்றைக்கு எம் தேசத்தில் அத்தனை தாய்மாரும் நிஜக் குந்திகள். வீட்டில் ஒரு குளந்தை வீமனாக்கப்படுகிறான். இது போன்ற சங்கடத்தை காலம் எம் அம்மாக்களுக்கு தந்திருக்கக்கூடாது

பாவம், அம்மாவால் என்ன சொல்லமுடியும், என்ன செய்யமுடியும், வரப்போகிற மரண அவலத்தை இப்பொளுதே சுமக்கத் தொடங்கிவிடுவாள்.இந்த உலகத்தை சபித்தபடி.
இந்த உலகம் எங்கள் கனவுகளை கொன்றுபோடுகிறது. எதை அனுபவித்தோம் நாம், துயரத்தை தவிர, எங்களிடம் வேறெந்த தடயத்தை இந்தக் காலம் விட்டுச்செல்லப்போகிறது என்கிற விரக்க்திதான் அவளை சபிக்குமளவிற்கு தூண்டியிருக்க வேண்டும். இப்படி, ஆரோக்கியமான சூழல் இல்லாத இந்தச் சமுகம், எப்படி அடுத்த தலைமுறைக்கு, புதிய நம் விடியலில் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இன்னும் நம் இனத்தின் வாழ்வியல் விழுமியங்களையும் மட்டும் எடுத்துச் செல்லப்போகிறது, இவை இல்லாமல் பிறகெப்படி நாம் ஓர் இனமாக எஞ்சுவது. பிறகெதற்கு நாடு.

ஆக இனத்தை விடவும், நாட்டைவிடவும், குளந்தைகள் வாழ்வே பாதுகாக்கப்படவேண்டியிருக்கிறது.


ஆதலால் தான் சொல்கிறேன்
நிறுத்துங்கள்

விடியல் மீது
எனக்கு மட்டுமென்ன ஆர்வமில்லயா

நானும் இதே மண்ணில் புரண்டவன்
நானும் இதே வீதியில்
பட்டாம்பூச்சி பிடித்துத் திரிந்தவன்
என் வாலிபக் கனவுகளும் இங்கேதான்

நீங்கள் சுவாசித்த
காற்றைத்தான் நனும் சுவாசிக்கிறேன்
என் நரம்புகளிலும் எரிமலையுண்டு.
ஒலிபெருக்கி பொருத்தி
என் ஒருவனுக்குள் ஒலிக்கின்ற
குரலும்
நீங்கள் கேட்கும் அதே
சுதந்திர தாகம் தான்
எங்கள் கூட்டுக்குள் நுளைகிற
வேட்டை நாய்களை காண்கிறபோது
எனக்கும் நாடி துடிக்கிறது

ஆனாலும் அன்பர்களே
எங்கள் குளந்தைகளை
ஒருதரம்
திரும்பிப் பாருங்கள்

காய்ந்து இறுகிய அந்த முகங்களில்
சோக வடுக்களை பாருங்கள்

அவர்களின் கண்களில்
விரிகின்ற கனவுகளின்
ஏக்கத் தகிப்பை ஒருதரம்
பாருங்கள்

நீங்களும் நானும்
இழந்தது இழந்ததுதான்

அவர்களாவது வாழட்டும்
அவர்களாவது கொஞ்சம் சிரிக்கட்டும்

நீங்களும் நானும்
இழந்தது இழந்ததுதான்

No comments: