Thursday, June 25, 2020

அடிமட்டம்





































வருடம் ஒருமுறை
இயந்திரங்கள் உருண்டோடி
நேர்த்தியாக்கப்படும்
பாலத்தடி றோட்டு
அடிமட்டம் வைத்து
அடித்ததுபோல் நேராக இருக்கும்
பக்கத்து வயலில்
உள்ளவர்களுக்கெல்லாம்
இதுதான் புதினம்
மாரிமழை தொடங்க
பாலம் தாண்டி வெள்ளம்
மூடி ஓடும்

ஐயோ புதுசாய் போட்ட றோட்டு
அத்தனை மனதும்
அறுந்து விழும்
ஓடி ஓய்ந்ததும்
புட்டிகள் முளைத்தபடி
அரிச்சோடிய பழையறோட்டு
எட்டிப்பார்க்கும்
எங்களுக்கு இது போதும்
மேல் மட்டத்திற்கு என்ன வேலை
அலுத்துக்கொள்ளும்
யாரிலும் நோகாத மனங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தின் வெளிச்சம் "புரட்டாதி - கார்த்திகை- 2002" இதழ்] 


Saturday, November 25, 2017

முதல் மணி


பாவம் மனசு
நொந்து வெந்துபோகிறது.
காய்த்து
தொங்கும்
வலித்திரள்களினூடு
விஷப்புழுக்கள்
தின்று கொழுத்து
உந்தி எழும்.
பாவம் உயிர்
உறிஞ்ச உறிஞ்ச
திமிறித் திமிறி விழும்.
கல்லின்மேல்
முள்ளின்மேல்
போதியும்
ஆக்கிய அச்சுக்குள் அகப்படுகிறது
புரியேறாமல்.
கரி பிரட்டி
முகம் திருத்தும் காதல்.
ஆயுள் சுருட்டி எடுத்துக்கொண்ட
காலம் சொல்லிக்கொண்டு செல்கிறது
"முதல் சாவுமணி
ஓர் கொலுசுமணி"

[தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தின் வெளிச்சம் "சித்திரை - வைகாசி - 2004" இதழ்]

Sunday, November 19, 2017

சாடசி



மனச்சாட்சி
என்னை தின்றுகொண்டிருக்கிறது 
ஒருவேளை
ஊன் உருகிப்போய்
உடல் செத்துப்போகுமுன்
மனச்சாட்சி
என்னை கொன்றுபோடலாம்
அப்போது
இந்த சடம்மீது
எங்க்கள் ஊரின்
சாக்கடைகள் மட்டுமே
ஓடிக்கொண்டிருக்கும்
இன்றுள்ள
சங்க்கீதங்க்களை எல்லாம்
சத்தங்க்களாகவே
காணமுடியும் என்ன்னால்.
உங்க்களின் கூண்டில்
எண்ணப்படாத கம்பி - நான்
இப்போதெல்லாம்
ஏதோ ஒரு நப்பாசை
நோய் இருக்க
வலிகளை மட்டும்
மறந்துபோவதாக....


[சாட்சி, இது ஈழத்திலிருந்து வெளியாகிய ஈழநாதம் பத்திரிகையில் பிரசுரமான கவிதை ஒன்று - (வெள்ளிநாதம் - 12-11-2004)]

Wednesday, February 29, 2012

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா


"உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா" - திருமதி ரமணிச்சந்திரன், அழகான கதை। கதை படிக்குமளவுக்கு பொறுமையை தந்த 'உடைஞ்சுபோன என் லப்டொப்க்கு' நன்றி।

நினைவுகளுக்கும் பழமைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மீழப்பெறமுடியாதவை , மனதை ஆட்கொள்ளும் இனிய உணர்வுகள் இப்படி வார்த்தைகளில் பல அர்த்தங்கள் சொல்லமுடியும். எப்படிச் சொன்னாலும் அவை இழப்பின் ஒருவகை வலியைதான் உணர்த்துகின்றன. நினைவுகள் சுவாரிஸ்யமானவை, அவை பழமையை நோக்கிப் பயணிப்பவை. நாங்கள் அதற்கு எதிர்த் திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும் கூட அவை, அவ்வப்போது மனதை பனிமூட்டமாக வந்து முற்றுகையிடும். சில நிமிடங்களிலோ சில மணித்துளிகளிலோ அவை கலைந்துபோய்விடும். காலம் செல்லச் செல்லதான் நினைவுகளுக்கு சுவாரிஸ்யம் கூடுகிறது. நாவல்களையோ கதைகளையோ நாடிச் செல்பவர்களுக்கும் இந்தப் பனிமூட்டத்துக்கும் ஒரு தொடர்பிருக்கிறது. எவரோ எழுதும் கதைகளில், அவரவர் தங்கள் தங்கள் நினைவுகளைப் படிக்கிறார்கள். இந்தக் கதைகள் பனிமூட்டம் கலையாமல் வைத்துக்கொள்கின்றன.

மனிதரில், பாந்தமில்லாமல் பந்தம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் இயற்கை அக்கறையாக இருக்கிறதோ என்னவோ, கதாசிரியர்கள் அக்கறையாகவே இருக்கிறார்கள். பந்தமிருந்தாலும், நல்ல பாந்தமே ஆனாலும் வாழ்நாளின் பாதி நாட்கள் சஞ்சலங்களோடுதானே கழிகின்றன, என்பதுதான் பெரும்பாலான அவதானங்களாகக் காணப்படுகின்றன. ஏன் இப்படி உறவுகளையும் உணர்வுகளைப் போட்டுக் குளப்பிக்கொள்கிறார்கள் என்று எனக்குள் அடிக்கடி எண்ணத் தோன்றும். எல்லாவற்றுக்கும் அன்புதான் காரணகர்த்தா என்பது குன்றின்மேல் தூக்கிவைத்த விளக்குகாய் இருக்கிறது. உணர்வுகள் இருக்கின்றவரையில் உறவுகளுக்கான தேவையும் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பது நியதி. ஆக உயிர்வாழ்கின்ற வரையில், மனிதர்களுக்கு ஏதோ ஒரு அனுபந்தம் இருக்கவேண்டும் என்பது அவசியமாகிவிடுகிறது.

"அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு"

அன்பினால் ஏற்படும் ஆசை அல்லது விருப்பம், எல்லோரிடத்திலும் நட்பாயிருக்கின்ற மேன்மையை தேடித்தரும், என்று என்னதான் இந்த அன்பை பற்றி உயர்வாகச் சொன்னாலும் அதுவே "இன்பம் - துன்பம்" என்கிற அதலபாதாள இடைவெளிக்குள் மனிதனைப் போட்டு பந்தாடுகின்றது என்பதுதானே ஜதார்த்தம்.

"உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா " என்கிற பாரதியின் வரிகளை, இந்த நாவலின் தலைப்பாகப் பார்த்ததும் மனம் அதனுள் இழுத்துக்கொண்டு போய்விட்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும். திருட்டு மாங்காய்க்கு எவ்வளவு சுவை அதிகமோ, அதேபோல திருடிப் படிப்பதுவும் அலாதியானதுதான்.

"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" என்று ஆரம்பிக்கும் பாரதியின் பாடலின் இடையில் வரும் வரிகள்தான் அவை. உண்மையில் "உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி" என்றுதான் அந்தவரி முளுமையடைகின்றது. 'உன்மத்தம்' என்றால் உணர்ச்சியின் உச்சனிலை என்று ஒரு பொருள் இருக்கிறது. உன்னை தழுவினால் நான் உணர்வின் முளுமையான சுகத்தை அனுபவிக்கிறேன் என்பதாக பாடல் வரி சொல்கிறது. அவ்வளவு காதல் அதனால் ஏற்பட்ட ஈர்ப்பு என்பதுதான் பொருள், அன்றி வேறு திசைக்கு அர்த்தங்களை நகர்த்திச்செல்லவேண்டிய அவசியமிருக்காது என்பது எனது விளக்கமும்கூட.

இன்னும், திருமதி।ரமனைச்சந்திரனின் வார்த்தைகளையும், இடையிடையே அவர் பயன்படுத்தியிருந்த முதுமொழிகளையும் ரசித்துக்கொண்டும், பெண்மையின் உணர்வுகள் இப்படித்தானிருக்குமோ என்று பலதடவை எனக்குள்ளே கேட்டுக்கொண்டும் படித்துமுடித்திருந்தேன்। இனிமேல், சந்தேகம் என்கிற வார்த்தையை கேட்டால் எனக்கு "அபராஞ்சி" தான் நினைவுக்கு வருவாள் போலிருக்கிறது, அவள் நினைவுக்குள் வந்தால் இலவச வெளிச்சம்தானே, வரட்டும்। காரணம் ஆவள்தான் புடம்போட்ட தங்கம் ஆயிற்றே!... ("அபராஞ்சி" என்றால் - புடம்போட்ட தங்கம் என்று பொருளாம்)

"கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி" - பாரதி

Friday, January 27, 2012

நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு (சீதையின் காதல்)


ராமன் கொடுத்துவைத்தவன், வேறென்ன சொல்ல. அழகிலும் குணத்திலும் நிகரற்ற மங்கை மனைவியாக கிடைத்தால் இன்பம், அதிலும் அவள் அளவற்ற அன்பைத் தருகின்ற காதலியுமாக இருந்தால் கேட்கவும் வேண்டுமா. அழகேயுருவான காதல் மனைவி அருகிருந்தால் வனவாசம் என்ன அஞ்ஞாதவாசமென்ன எல்லாமே பிக்னிக்தான்


ராமன் வனவாசம் செல்லத் தயாராகும்வேளையில் தன் அருமைப் பெண்டாட்டியை பார்த்துச் சொல்கிறான், அடியேன் யாராலும் வளைக்கமுடியாத வில்லை எப்பெரும்பாடுபட்டு வளைத்து நான் கரம் பற்றிய என் காதலியே, நான் போகவிருப்பது சிங்கப்பூர் ஃபிக்னிக் அல்ல, வனவாசம். அதனால் நீ இங்கேயே அரண்மனையிலேயே இருந்துவிடு என்று சொல்கிறான். சதா டொக்கு ஃபிகருகளே கொஞ்சம் பௌசு வந்ததுமே மகாராணிமாதிரி பில்டப் போட்டு ஊருக்கே சீன்போடுற இந்தக்காலத்தில - இவள் தேவதைபோன்ற ராஜகுமாரி, பிறந்ததிலிருந்து எந்தத் துன்பத்தையும் அனுபவித்திராதவள், பூவிலும் மென்மையான பாதங்களை உடையவள் - எப்படி என்னோடு காட்டுக்கு அதுவும் சிங்கம், புலி, நரி இந்தமாதிரி அனிமல்ஸ் எல்லாம் இருக்கிக்கிற பயங்கரக் காட்டுக்கு, சூடு குளிர் கூதல் பார்க்காமல்?.. சான்ஸே இல்ல. வருவாயா? என்று கேட்டாலே டைவேஸ்தான் என்று ராமன் நினைத்திருப்பானோ என்னவோ.

ஆனால் சீதைக்கு வருத்தம், பெரியவர்கள் சொல் கேட்டல் அறமே ஆயினும் பாற்கடலிலிருந்து பிரியாமல் அயோத்திவரை கூட வந்தவளாகிய மனைவியை நடுவழியில் விட்டுவிட்டு பிரிந்து செல்வதென்பது, அப்பெரியவர்கள் சொல்லும் அறத்தை பாதிக்கவில்லையா, சரி போகட்டும் குரவர் தமக்கு நன்மை பயப்பவைதானே அறங்களாகக் கொள்ளப்பட்டன, ஆனாலும் இவ்வளவுதூரம் நம்பி கூட வந்தவளை அருகில் இருக்கும் வனத்துக்கு அழைத்துச் செல்லாமல் தடுப்பதேன் என்று எண்ணி வருந்தினாளாம் சீதை. (அதுவரை நந்தவனத்துக்கும் - வனத்துக்கும் வித்தியாசம் அறிந்திராதவளாய் இருந்தாள் - சீதை எனச் சொல்லப்படுகிறது)

இருந்தாலும் ராமன் யார், அவன் ராஜகுமாரன், வரலாறுகளில் படிக்கப்பட்டு துதிக்கப்படப்போகின்றவன், அப்பழுக்கில்லாதவன் நின்று ஜோசித்து நிதானமக அறங்களுக்கு நியாயம்கற்பிக்கின்றவகையிலும் பெண்டாட்டியை சமாதானம் செய்கின்ற வகையிலும் பதில்சொல்கின்றான்.

"மலைவழி, காட்டுவழி, இரவிலும் வெப்பம் செய்யும் வழி, கூரிய கற்கள் உற்ற வழி, எனவே வெப்பமான கூர்ங்கற்கள் உராய்வதனால் ஏற்படும் வலியைத் தாங்கும் கடுமையுடைய பாதம் அல்ல உன் பாதம்; குளிர்ந்த செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய மெல்லிய மலரனைய பாதம். அதனால்தான். இங்கேயெ இருந்துவிடுமாறு கூறினேன் அன்றி உன்னைப் பிரிகின்ற வல்லமை எனக்குமட்டும் எப்படி இருக்கும், ஆதலால் வருத்தாதெ! குரவர் சொன்னால் கொலைகூடக் குற்றமில்லை என்பதைறியாதவளா நீ, என்பது போல ராமன் சமாதானம் செய்யப்பார்க்கிறான்.

ஆனால், இளம் பெண்டாட்டி ராஜகுமாரி - சீதை அக்கணமே பதிலுரைக்கிறாள் இவ்வாறு, மேனியில் மட்டுமல்ல சிந்தையிலும் அழகிற்கு தன்னை விஞ்சியவர் யாருமில்லை என்பது புலப்பட. அந்தப் பாடல் இதுதான்,

"பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்."

அடேய் என் புருசனாகிய காதலனே!, "இரக்கம் அற்ற மனத்தில் ஒரு சிறிதும்விருப்பம் இல்லாமல் என்னை விட்டு விலகிச் செல்கின்றாய், உன்னால் வரும் பிரிவுத் துயராகிய வெப்பத்துக்கு ஊழிக்காலத்துச் சூரிய வெப்பமும் நிகராகாது, அப்படி இருக்கும்போது, நீ என்னை பிரிந்து செல்வதாகிய பெருந்துயரைவிடவா சுட்டுவிடப்போகிறது உன்னுடன் நான் வரும் அப்பெரிய காடு என்றுரைக்கிறாள்.
அப்படி கேட்ட சீதை உடனேயே உள்ளே சென்று மரவுரியை அணிந்து கொண்டு ராமனுக்கு முன்பே தயார் ஆகிவிடுகிறாள், என்று சொல்கிறது ராமாயணம்.

தன் துணைவிக்கு துன்பத்தை கொடுக்கக்கூடாது என்று கணவனும், துன்பம் என்பதே நான் உனைப் பிரிந்திருப்பதுதான் என்று மனையாளும் நினைக்கிறார்கள். உன் காட்டில் நீ தனியாகப் படப்போகும் இன்பதுன்பங்களோடு பங்கெடுக்காமல் இங்கிருக்கின்ற சௌகரியங்களை நான் அனுபவிக்கின்றதென்பது நரகமல்லவா, அதில் என் ஆன்மா வெந்து வெந்து எரியுமல்லவா - அதைவிட என் மேனி வெந்துபோவது ஒன்றும் வலியில்லை என்றுசொல்லி, கல்லும் முள்ளும் குத்த வெயிலும் பனியும் வாட்ட காட்டுக்குச் செல்கிறாள். காடென்பது எப்படி இருக்கும் என்று அறிந்திராத ராஜகுமாரி கணவனோடு கைகோர்த்துக்கொண்டு செல்கிறாள் உள்ளத்திலே உவகை பொங்கப் புறப்படுகிறாள் என்று ராமாணம் சொல்கிறது. சீதையின் உன்னதமான காதல் வெளிப்படுகின்ற இடமாக இதைச் சொல்வார்கள்.

ராமன் கொடுத்துவைத்தவன், வேறென்ன சொல்ல. அழகிலும் குணத்திலும் நிகரற்ற மங்கை மனைவியாக கிடைத்தால் இன்பம், அதிலும் அவள் அளவற்ற அன்பைத் தருகின்ற காதலியுமாக இருந்தால் கேட்கவும் வேண்டுமா. அழகேயுருவான காதல் மனைவி அருகிருந்தால் வனவாசம் என்ன அஞ்ஞாதவாசமென்ன எல்லாமே பிக்னிக்தான்.

இந்தக்காலத்திலும் சீதைகள் இருக்கிறார்கள். மேக்கப்பிற்குப் பின்னால் ஒழிந்துகொண்டிருக்கும் அழகு சீதைகள், சௌகரியங்களுக்குப் பின்னால் வருகிற சாதுர்ய சீதைகள், "குணம் என்ன குணம்" சற்குணம் என்பதே ஆணாதிக்க கட்டுப்பாடுகள்தான் என்று அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து புதுமைப் பெண்ண்களாய் தம்மை காணும் மொடல் சீதைகள். காதல் என்கிற பெயரில் - என்னென்னவோ செய்கிற சீதைகள். இப்படியான சீதைகளால் துரத்தியடிக்கப்பட்டிருக்கிறாள் பெண்மையின் அடையாளமாகச் சொல்லப்பட்ட "சீதை". நாளுக்கு நாள் மாறிவரும் இன்றைய உலகத்தில், புதுமை என்று சொல்லிக்கொண்டு பெண்மையின் பண்புகளையே (Qualities of Women) இழந்துகொண்டுபோகிறாள் "சீதை".

-----------------

பிற்குறிப்பு :- ஒரு நான்கு நாட்களுக்கு முதல் இந்தமாதிரி ஒரு சீன் என் வாழ்க்கையிலும் நடந்தது!!!, என்னை பார்த்து ஒரு பொண் சொன்னாள் "நின் பிரிவினும் சுடுமோ, பெருங்காடு". இதை யாரும் நம்பப்போவதில்லை என்பத எனக்கு தெரியும்!!!. பிறகு "இன்றுபோய் நாளைவா" என நயம்படக் கொப்பியடித்து மாட்ட நான் என்ன 'வில்லிபுத்தூரார் ஆழ்வாரா'. அழகான, தெய்வீகமான "சீதையின் காதலை" ரசித்தேன், அதை பகிர்ந்துகொள்ள விரும்பினேன். எழுத்தில், சொல், பொருளில் குற்றமிருப்பின் இந்தச் சிறியவனாகிய அடியேனை மன்னிக்க.

- ப. அருள்நேசன்