Saturday, April 11, 2009

நான் ஒரு சிறைக் கைதி


நான் ஒரு சிறைக் கைதி
யாரும் தீர்ப்பிடாத
குற்றங்களுக்காக
கம்பிகளே இல்லாத கூண்டொன்றில்
அடையுண்டுகிடக்கிறேன்
எனக்கு தீர்ப்பெழுதக்கூடிய
அந்த நீதிதேவன்
வருவான் எனச்சொல்கிறார்கள்
என்னை இங்கிருந்து மீட்க
அவன் வருவதற்கான
அறிகுறிகளேதுமில்லை
இதுவரை வந்ததுமில்லை
நானும் கூடவே
சேர்ந்து தேடினேன்
அவன் முகவரியாவது சிக்குமென்று
பல ஆண்டுகள்
தேடியதில்
இறுதியாகக் கண்டுபிடித்தேன்
அவன் வீட்டுக்கான
சில நூறு முகவரிகளில் எதிலும்
அவன் இல்லை என்று

இறுதியாக
நானே எழுதினேன்
எனக்கான தீர்ப்பை
நான் சுமந்துகொண்டிருக்கும்
காரணங்களற்ற குற்றங்களை
தள்ளுபடிசெய்துகொண்டு
"உலகம் தண்டிக்கப்படக்கூடியது"
என்று