Monday, September 21, 2009

நிறம் மாறாத நினைவுகள்


இது ஒரு பிரபல்யமடையாத உன்னதமான ஒரு மனிதனின் கதை. அலங்காரங்கள் சூடப்படாமல் எழுதப்படுகிற ஓர் இளைஞனின் வரலாறு. எனது எழுத்துக்கள் அவருக்கு மரியாதை செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளே நுழைகிறேன்.

எடின் ஜூட், ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தின் இரண்டாவது பிள்ளை. அவருக்கு மூத்த சகோதரி ஜூடித், அவர்கள் எப்போதும் நண்பர்களைப்போலவே பழகுவார்கள். அன்பு மட்டுமே தெரிந்த அம்மா, பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றித்தர எப்போதும் தயாராயிருக்கிற அப்பா, இதுதான் எடினின் அமைதியான குடும்பம்.
எடின் தனது விருப்பங்களை எப்போதும் தனது பெற்றோரிடம் எடுத்துச்சென்று சம்மதம் பெற்ற பின்னரே எதையும் செய்வான். ஆனால் யூடித், தான் நினைத்ததை செய்தேமுடிக்கும் பிடிவாதக்காரி. படிப்பில் இருவரும் மிகவும் திறமைசாலிகள், எடின் படிப்பு மட்டும் அல்லாமல் நல்ல மேடைப்பேச்சாளனாகவும் இருந்தான்.

அப்போது எடின் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தான், வசிட்டர்கள் வாயால் இவன் "பொறியியல் பீடம்" செல்வான் என்று முத்திரை குத்தினார்கள். வசிட்டர்களுக்கு திறமைசாலிகளை அடையாளம் காணத்தெரியுமே தவிர வருங்காலத்தை எதிர்வுகூறவா முடியும். அந்த நாட்களில் எடின், கம்யூனிஸம், பொருளாதாரம், அரசியல், சமுகவியல்..... என்று தேடித் தேடி படித்து அனல் பறக்க மேடைகளில் பேசிக்கொண்டிருந்தான்.

இப்படி இருக்கும்போது ஒருநாள் எடின் பாடசாலை முடித்து வீட்டுக்கு வருகிறான், உடைகளை மாற்றிக்கொண்டு நேராக தாயிடம் செல்கிறான். " அம்மா, நான் போராட்டத்தில் என்னையும் இணைத்துக்கொள்ளப் போகிறேன்" என்று சொல்கிறான். தாய் அதிர்ச்சிகலந்த வேதனையோடு அமைதியாய் இருக்கிறாள். "அம்மா, ...." அவன் அவள் காலடியில் வந்து அமர்கிறான். "அப்பாவை கேட்டிட்டு போப்ப்பா" அவன் தலையை வருடியபடி எங்கோ வெறித்தபடி சொல்கிறாள் தாய். அவன் வளமையான புன்னகையோடு எழுந்து செல்கிறான்
எடின் அப்பாவின் அறைக்குள் செல்கிறான், "அப்பா உங்களோட ஒரு விசயம் பேசவேணும்"
தந்தை, புரட்டிக்கொண்டிருந்த பத்திரிகையை ஓரமாக வைத்துவிட்டு கேட்கிறார் "என்னப்பா என்ன விசயம்..... என்ன வேணும் கேளுங்கோ" வரப்போகிற துயரத்தை அறியாமலே தந்தை அவனது முகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார். "அப்பா நான் இயக்கத்தில சேரலாம் எண்டு இருக்கிறன்" அந்த நிமிடத்திலேயே எரிமலையாய் வெடித்துப்போனவர், எந்தவித சஞ்சலமும் இல்லாமல் கேட்கிறார் " நல்லா யோசிச்சுத்தான் முடிவெடுத்தநீங்களோ"

ஓம் அப்பா, நான் முழுத்திருப்தியோடதான் இதைச்சொல்லுறன்"

ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு தந்தை சொல்கிறார், "சரி, உமக்கு எது சரி எனத் தெரிகிறதோ அதையே செய்யும்"

எப்ப சேரப்போறீர்"

இண்டைக்கே,.... அப்பா போட்டுவாறன்!

"போட்டுவாங்கோ"

இவைதான் அவனது வாழ்வின் மிகக் கனதியான உரையாடல். அவனது வாழ்வின் பாதையை மாற்றிய துடுப்பு விசை. அந்த நிமிடம் தான் அவனது குடும்பத்தின், வசந்தகாலத்தின் முடிவு என அவன் எண்ணிப் பார்த்திருந்திருப்பானே என்னவோ?

வீட்டில் ஒருத்தருக்கு ஒருத்தர் அவனது பிரிவின் வேதனையை வெளிக்காட்ட முடியாமல் தவித்தார்கள். நாட்கள் நகர்ந்தன, ஒரு வருடம் ஓடி மறைந்தது. ஒரு போராளியாக விடுமுறையில் வருகிறான் எடின். மகனைப் பார்த்ததும் தந்தைக்கும் தாய்க்கும் மீண்டும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. எடின் தனது சகோதரியை ஒருவாறாக சமாதானப்படுத்திவிட்டு, தனது அறைக்குள் நுழைகிறான். அவன் வைத்துவிட்டுப்போன பொருட்கள் ஒவ்வொன்றும் அப்படியே அந்தந்த இடத்தில் இருக்கின்றன, ஆனால் தூசியோ ஒட்டடையோ படராமல் அப்போதுதான் அவன் வெளியே போய் வருவதுபோல் காட்சியளிக்கிறது அறை. அவனது பெற்றோருக்கும் சகோதரிக்கும் அந்த அறைதான் மகனாகவும் தம்பியாகவும் இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்கிறான். கண்கள் பனிக்க வாசல் கதவில் சாய்ந்து நிற்கிற சகோதரியை பார்க்கிறான், அவள் புன்னகைத்தபடியே சொல்கிறாள் "எடின் நல்லா படுத்து தூங்கும் காலையில் சந்திப்போம்.. குட்நைட்"

கதவை சாத்திவிட்டு அறையை சுற்றிப் பார்த்தபடியே பழைய ஞாபகங்களோடு கலந்துபோகிறான். உணர்ச்சி பெருக்கோடு அவனது இரகசியங்களின் பேளையாக இருந்த அலுமாரியை திறக்கிறான் அங்கே இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. சின்ன வயசிலிருந்து அக்கா யூடித், எடினோடு சண்டைபோட்டுக்கொண்டு பிடிவாதத்தோடு பறித்து வைத்திருந்த பொருட்கள் எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, அவை எடினுக்கு மிகவும் விருப்பமாயிருந்த பொருட்கள். அன்றிரவு அவனது சௌகரியமான கட்டிலில் கூட அவனால் தூங்க முடியவில்லை. நினைவுகள் முட்களாயிருந்தன, உறவுச் சிலுவையில் அன்பின் ஆணிகள் அவனை அறைந்துகொண்டிருந்தன.

அவன் விடைபெறும் நாள் வந்தது. யூடித், எடினிடம் கேட்கிறாள் "தம்பி நீர் இதில இருந்து விலகி வந்துவிடும், உமக்காக இல்லாட்டியும் அம்மா அப்பாவின் சந்தோசத்திற்காகவாவது..... எங்களுக்கு பயமா இருக்கு எடின்..."
எடின் பதில் சொல்கிறான், இல்லை அக்கா இது நானாகத் தெரிவுசெய்த பாதை, இப்ப நான் போயே ஆகவேண்டும், இதை நீங்களும் புரிந்துகொண்டேதான் ஆகவேண்டும்......
என் முழுவாழ்விற்கும் போதுமான அன்பை உங்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட திருப்தி எனக்கிருக்கிறது, நான் புதிய சூழலுக்கு என்னை பழக்கப் படுத்திக்கொண்டதை போல நீங்களும் நானில்லாத சூழலுக்கு உங்களை தயார்ப்படுத்தவேண்டும்" அவனது பேச்சைவிட அவன் சிரிப்பைத்தான் அதிகமாக கோபித்துக்கொண்டாள் யூடித். வார்த்தைகளால் மனங்களை வென்றுவிடுகிற சக்தியை கடவுள் உமக்கு கொடுத்திருக்கலாம், ஆனால் உமது நியாயங்கள் என்னிடம் எடுபடாது......என்று சொல்லிவிட்டு எழுந்துசெல்கிற அக்கவை பார்த்து, "பிடிவாதக்காற அக்கா" சொல்லிச் சிரிக்கிறான் எடின்.

ஆண்டுகள் கடந்தன, எடினின் குடும்பம் அவனது பிரிவால் தவிப்பதை மறந்து அவனது வரவிற்காய் காத்திருக்க தொடங்கியிருந்தது. இம்முறை அவனது வருகை புதுமாதிரியாக இருந்தது. ஒருநாள் காலை பத்திரிகை வாங்கிவந்த தந்தை அதை இரண்டுமுறை புரட்டிவிட்டு, அதை ஒரு ஒரத்திலே தூக்கிப் போட்டிருந்தார். இதை அவதானித்த யூடித் பத்திரிகையை எடுத்து என்ன செய்தியாக இருக்கும் என்று தேடுகிறாள், "எடின் யூட் என்றளைக்கப்ப்படும்.............நேரடிச் சமரில் வீரச்சாவடைந்தார்........" மீண்டும் மீண்டும் படிக்கிறாள் யூடித் " தம்பீ......" ஒலித்தடங்கியது வெறும் குரல் மட்டுமாயிருந்திருக்குமா!

அந்தச் செய்தி மிச்சமிருந்த இன்பங்களையும் பிடுங்கிக்கொண்டதன் பிறகு துயரத்தின் முழுமையான பிம்பத்தை ஒட்டிக்கொண்டது அந்த வீடு. மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியே அவனது தாயின் மரணத்துக்கு காரணமாகிவிடுகிறது, தந்தை நோய்வாய்ப்படுகிறார், யூடித் தனது உயர்கல்வியை பாதியிலே நிறுத்திக்கொள்கிறாள்.
இரண்டு ஆண்டுகளில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படுகிறது, சமாதாச் சூழல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. யூடித் தந்தையை அழைத்துக்கொண்டு எடினின் கல்லறையை பார்க்க வருகிறாள். அங்கே அவனது அணிப் போராளிகளை கண்கிறார்கள்

நாங்கள் அவரை " கண்ணாடி அண்ண " எண்டுதான் கூப்பிடுவம், நல்ல மனிதர் அவர், சண்டை நேரம் தவிர்த்து எங்களோட அவரும் ஒருஆளா தான் இருப்பார். அவரிட்ட இருந்து நாங்கள் கற்றுக்கொண்ட விடயங்கள் நிறைய, அவர் ஒரு நல்ல ஆசான். ஆனால் நாங்கள் அவரை இவ்வளவு விரைவில் இழந்துவிடுவோம் என்று நினைக்கவில்லை.
அண்டைக்கு ஆமி எங்களை சுத்திவளைச்சிட்டான், வெளியால வர இருந்த ஒரு வழியையும் நெருங்கிக்கொண்டிருந்தாங்கள். அப்பதான் கண்ணாடி அண்ண சொன்னார், நான் வாறன் நீங்கள் முதல்ல வெளியேறுங்கோ" அவரோட ஒரு பத்துப்பேர் தான் அப்ப இருந்தாங்கள், எங்கள போகச் சொல்லீட்டு அவர் வாறவனை மறிச்சு அடிக்க தயாராகீட்டார், அவர முதல்ல வெளியேறச்சொல்லி நாங்கள் எவ்வளவு கேட்டும் அவர் கேக்கேல்ல, அவற்ற கட்டளையை எங்களால மீற முடியேல்ல. அவர் சண்டையை தொடக்க நாங்கள் அந்த நேரத்தில வெளியால வந்திட்டம். அவர் அடிச்சுக்கொன்டே எங்களை நோக்கி வந்துகொண்டிருக்கேக்க ஆமீன்ர செல்லில பீஸ் பட்டு அந்த இடத்திலயே வீரச்சாவடைஞ்சிட்டார். சரியான சிரமப்பட்டுத்தான் அவற்ற உடல மீட்டுக்கொண்டுவந்தனாங்கள்." களத்தில் நடந்ததை கண்கள் கசிய சொல்லிமுடித்தான் ஒரு போராளி.

அப்போதுதான் எடின், ஐம்பது பேர் கொண்ட அணியின் தலைவனாக இருந்திருக்கிறான் என்பதே தெரிய வந்தது. அன்றைய தினம், கார்த்திகை 27., இராணுவ மரியாதையோடு அடக்கம்செய்யப்பட்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒரு நிமிடம் தீர்த்தக்கரைபோல திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் பேரமைதி விழுந்து சத்தங்களை எல்லாம் சிறை செய்து செல்கிறது. பின்பு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. சந்தன வாடையும் பூக்களின் புனிதமும் வீச, யூடித் றோஜாக்களால் தம்பியின் கல்லறையை அழகுசெய்துகொண்டிருந்தாள்.

Sunday, August 9, 2009

"WATER" திரைவிமர்சனம்


பத்து வயதுகூட நிரம்பாத குழந்தை சூர்யா , தூங்கிக்கொண்டிருக்கிறது.
அதனது தந்தை அவளை எழுப்புகிறார்.

My child,

"Do you remember getting married"

Baby said "No"

"Your husband is dead"

" You are a widow now"

Baby said " For how long father?"

WATER திரப்படம் இதிலிருந்து ஆரம்பிக்கிறது,

அந்தக் குழந்தையை தந்தை விதவைகள் வசிப்பிடமொன்றில் விட்டுவிட்டு வருகிறார், அவள் அம்மா அம்மா என்று கேட்டு அழுகிறாள். அந்த இல்லத்தின் பொறுப்பாளி மதுமதி வயசான கிழவி, அவள் அந்தக் குழந்தையிடம் சொல்கிறாள்

"Our Holly Books say a wife is part of her husband, while he is alive and when husband die, god help us, wives also half die so how can a half - dead women feel pain"

சூர்யா சொல்கிறள், " because she is half alive"

ஆத்திரம் கொண்ட முதியவள் சூர்யாவை கீளே தள்ளிவிட்டு திரும்பவும் இப்படி
பைத்தியக்காரத்தனமாய் நடந்துகொண்டால் ஆற்றில் தூக்கி எறிந்துவிடுவேன் என்று மிரட்டுகிறாள். சூர்யா " " I don't want to be a stupid widow fatty" என்று கத்திவிட்டு அவள் கலை கடித்துவிட்டு ஓடிவிடுகிறாள்.

அங்குள்ள இன்னொரு பெண், மதுமதிக்கு அடுத்தபடியாக அந்த இல்லத்தை பராமரிப்பவள் பெயர் தேவி, சூர்யாயுக்கு எல்லம் செய்து கொடுக்கிறாள் ஆனாலும் கண்டிப்புடனேயே நடந்துகொண்கிறாள், சூர்யாவுக்கு இன்னொரு துணை கிடைக்கிறது, அவளை சூர்யா கண்டவுடனேயே "Angel' என்று அளைக்கிறாள், அவளது பெயர் கல்யாணி, அழகிய திருமண வயது நிரம்பிய இழம் பெண். அவளும் சூர்யாவின் வயதிலிருக்கும்போதே விதவையாகியவள். கல்யானி சூர்யாவுக்கு தன்னுடைய நாய்க்குட்டியை விளையாடக்கொடுக்கிறாள். இருவரும் ஒருவருக்கொருவர் அன்போடிருக்கிறார்கள்.

ஒருமுறை பிரார்த்தனை செய்கிறபோது, " Where is the house for men widow" என்று சூர்யா கேட்கிறாள், அதற்கு " what a horrible thing to say, god protect our men from such fate, may your tongue burn, put out her tongue and throw it in the river" என்று கண்டபடி அவளை திட்டித்தீர்க்கிறார்கள்.

இப்படி இருக்கும்போது இவர்கள் இருவரும் நாராயணன் என்கிற வாலிபனை சந்திக்கிறார்கள், நாராயணன் கல்யாணிமீது காதல்வயப்படுகிறான், ஆரம்பத்தில் சங்கடத்தை உணர்ந்தாலும் கல்யணியும் காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால் அதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை, விதவைக்கு கல்யானமா? என்று எல்லோரும் சினக்கிறார்கள். ஆனாலும் கல்யாணியும் நாராயணனும் உறுதியாகவே இருக்கிறார்கள்.

இது அந்த முதிய கிழவிக்கு பிடிக்கவில்லை, காரணம் கல்யாணி அவர்களது சொத்தாயிருந்தாள், கல்யாணியை பணக்கார பிராமணர்களின் இச்சையை தீர்த்துக்கொள்ள அனுப்பி அதன்மூலம் பணம் பார்த்து பிளைத்துக்கொண்டிருந்தாள் அவள். அதற்காக பெண் தரகு வேலைபார்க்கும் அரவாணியோடு நட்பினையும் வைத்திருந்தாள். அவள் மூலம் கஞ்சா போன்ற போதை பொருட்களையும் வாங்கி அனுபவித்து வந்தாள் அந்தக்கிழவி. அவள் இதை அறிந்ததும் கல்யாணியின் கூந்தலை அறுத்து எறிந்து, அவளை ஒரு அறையில் போட்டு பூட்டிவிடுகிறாள்.

தேவி , தான் பணிவிடை செய்யும் வயசான பிராமணன் ஒருவனிடமிருந்து மறுமணம் பற்றிய சட்டம் அமுலில் இருப்பதை அறிந்துகொள்கிறாள், அவை ஏன் நமக்கு தெரிந்திருக்கவில்லை என்று அந்த முதியவனிடம் கேட்கிறாள், அதற்கு அவன், இதுபோன்ற சட்டங்களை நாம் புறக்கணிக்கிறோம் ஏன் என்றால் அவற்றல் நமக்கு ஒரு பயனுமில்லை என்று பதிலளிக்கிறான்.

தேவி அந்த இல்லத்தின் முதியகிழவியோடு சண்டையிட்டுக்கொண்டு, கல்யாணியை வெளியே அனுப்புகிறாள். கல்யாணியை ஏற்றுக்கொண்டு வள்ளத்தில் தனது வீட்டுக்கு அளைத்துச்செல்கிறான் நாராயணன், வளியில் அவனது தந்தையின் பெயரைக் கேட்கிறாள், அந்தப்பெயரை கேட்டதும் வள்ளத்தை திருப்பச்சொல்கிறாள், என்ன காரணம் என்று கேட்டதற்கு அதை உன் தந்தையிடமே கேட்டுக்கொள் என்று சொல்லிவிட்டு போகிறாள்.

நாராயணன் தந்தையிடம் கேட்கிறான், அதற்கு தந்தை " Bramins can sleep with whomever they want, and the women they sleep with are blessed" என்று பதிலளிக்கிறார்,

திரும்பிவந்த கல்யாணியை முதியவள் ஏழனித்துவிட்டு, கிலாபி ( பெண்தரகி) காத்திருக்கிறாள் அவ்ள் உன்னை ஒரு பிராமணன் வீட்டுக்கு அளைத்துச்செல்வாள், தயாராகு என்று கூறுகிறாள். வெறுப்படைந்த கல்யாணி ஆற்றில் மூழ்கி இறந்துவிடுகிறாள்.

நாராயணன் " Disguised as religion, it just about money" என்று சொல்லிவிட்டு புறப்படுகிறான்.

கல்யாணி இறந்துபோனதால், வருமானமில்லாமல் தவித்த கிழவி மதுமதி, சூர்யாவை வீட்டுக்கு அனுப்பிவிடுவதாக ஆசை காட்டி பிராமணன் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறாள்,எங்கே வந்திருக்கிறோம் என்று அறியாத குழந்தை I have come to play" என்று சொல்கிறது.

சூர்யாவை காணாது தேடிய தேவி, மதுமதியிடம் வந்து கேட்கிறாள் அதற்கு அவள் சூர்யாவை குலாபி அளைத்துச் சென்றிருப்பதாகச் சொல்கிறாள், கதறியபடியே சூர்யாவை தேடி ஓடுகிறாள் அவள். ஆற்றில் சூர்யா மயங்கிய நிலையில் வள்ளமொன்றில் கிடப்பதை பார்க்கிறாள். அவளை தூக்கிகொண்டு நடந்து வருகிறபோது மக்கள் காந்திஜீ ஐ பார்க்க ஓடுகிறார்கள். இவளும் சூர்யாவை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். அங்கே காந்தி பேசுகிறார் "இவ்வளவு காலமும் நான் நம்பினேன் கடவுள் உண்மை என்று, ஆனால் இப்போது எனக்குத் தெரியும் உண்மைதான் கடவுள் என்று, தொழில்தான் உண்மை. இதுவே நான் அனுபவித்தவை அதுவே உங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்". இதைக்கேட்டதும் அவள் சூர்யாவை காந்தியுடன் அனுப்பிவிடுவது என்ற உடிவுக்கு வருகிறாள், ஆனால் அவரை சூள நெருங்கமுடியாதளவுக்கு மக்களும் அவரது தொண்டர்களும் இருக்கிறார்கள். காந்தி ரெயினில் ஏறுகிறார், ரெயின் புறப்படுகிறது அவள் சூர்யாவை தூக்கிக்கொண்டு அருகாலேயே ஓடுகிறாள், இந்தக் குழந்தையையும் உங்களுடன் அழைத்துச்செல்லுங்கள், யாராவது இந்தக் குழந்தையை காப்பாற்றுங்கள், இவள் ஒரு விதவை என்று கத்துகிறாள். தொண்டர்களோடு நாராயணனும் இருக்கிறான் அவன் தேவியையும் சூர்யாவையும் காண்கிறான், சூர்வாவை வாங்கிக்கிள்கிறான், ரெயின் போய்க்கொண்டேயிருக்றது பெருமூச்சோடு சூர்யா மறையும் வரை பார்த்துக்கொண்டிருக்கிறாள் தேவி.


அந்த மங்கலான வெளிச்சத்தோடு திரை மூடப்படுகிறது.

விமர்சனம் என்று தலைப்பை எழுதிவிட்டு, படத்தையே ஒப்புவித்துவிட்டேன், காரணம் அங்கே விமர்சிக்குமளவுக்கு இடைவெளிகள் காணப்படவில்லை - படம் மிகத் தெளிவாக 1938ம் ஆன்டளவில் பெண்கள் அதுவும் விதவைகளுக்கு இருந்த நிலைமையை சொல்கிறது. மதம் என்கிற இயந்திரத்தை வைத்து மதவாதிகள் எப்படிப்பிளைக்கிறார்கள் என்று ஒப்புவிக்கிறது WATER.

DEEPA MEHTA இந்தப் படத்தினுடைய இயக்குனர், சர்ச்சைகளுக்குமேல் சர்ச்சையாக வாங்கிக்கட்டியவர். ஐம்பூதங்களை தலைப்பாக வைத்து படம் எடுக்கிறார். உலகம்முளுதிலும் இருந்து கண்டனம் கிளம்பியதாமே அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால், உண்மை இருக்கிறது, பிறகு சர்ச்சை வராமல்?

"வைஸ்ணவ ஜனதோ...." என்ற மென்மையான இசையோடும், வெண்ணிற ஆடையோடும் படம் கலந்திருக்கிறது, அந்தக்காலத்தில் இருந்த மதவாதிகள் தமக்கேற்றாற்போல் தமது சௌகரியங்களுக்காக "புனித வாக்கு" சம்பிரதாயம் சடங்கு என்று எல்லாம் போட்ட சட்டங்கள் எத்தனை பேரின் வழ்வை பலியாக்கியது, யுத்தமில்லாத மரணம் இது.

மக்களெல்லாம் பூசிக்கிற மதங்களும் சமயச் சம்பிரதாயங்களும் அதன் மறுபக்கத்தில் எத்தனை அசிங்கத்தை பூசி நிற்கிறது என்பதை சொல்கிறது WATER. கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு பிளைக்கும் கூட்டம், இந்தக்காலத்திலும் அழிந்துவிடவில்லை என்பதுதான் வருத்தம்.

இந்தக்காலத்து அரசியல் கட்சிகளும் மதங்களும் ஒன்று, பண்டைய காலத்தில் மக்களை அடிமைப்படுத்த அரசர்கள் உபயோகித்த தந்திர ஊடகம் தானே மதம், அதற்காகவே மதங்கள் தோன்றியும் இருக்கலாம். இன்றைய காலத்தில் அனேகமானோருக்கு கடவுள் நம்பிக்கை அற்றுப்போனதற்கு காரணமே மதங்கள் செய்கிற இதுபோன்ற அசிங்கத்தனங்கள்தான் காரணம்.

தீபா மேத்தாவின் சமூக அக்கறை, பெண்ணிய விடுதலை உணர்வு ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. உலகத்தரம் வாந்த அருமையான திரைப்படம், கண்டிப்பாக இந்துமதத்தை பின்பற்றுபவர்கள் பார்க்கவேண்டிய திரைப்படம்.

இது ஒரு காலம் பிந்திய பதிவு, ஆனாலும் நல்ல படங்களை எப்போது வேண்டுமானாலும் பாராட்டலாம். ஏற்றுக்கொள்ளலாம்.

தீபா மேத்தாவுக்கு வாழ்த்துக்கள்.

Wednesday, July 22, 2009

போலிப் புன்னகை


வலிகள் வடியாத
துயரப் பேளை ஒன்று
என் தோழ்களை
எப்போதும் அழுத்திக்கொண்டிருக்கிறது
வேணிலின் ஸ்பரிசங்கள்
ஏதோ ஒரு தூரத்திலிருந்து
எனக்குள் கிளர்ந்தெளும் ஞாபகங்கள் - அவை
மரணித்துப்போய்விட்ட
அதன் நிஜத்தை எனக்குள்
ஏற்க மறுக்கின்றன

மீண்டும் எனக்கு
கொய்யக் கிடைத்த புன்னகைகள்
குறைகளோடும் காயங்களோடுமிருந்தன
பூக்கள் தம் காயங்களை
மறைத்துக்கொண்டு
முகம்காட்டி சிரித்தன
ஆனாலும் அவற்றின்
வாசனையில் மரணவாடையிருந்தது

கிளைகள் ஒடிந்தபின்னும்
மரங்கள் பூக்கின்றன
காய்க்கின்றன
எல்லாம் சரியாகிவிடும்
வடுக்களைத் தவிர.

[ இந்தக் கவிதை நான் கைகளிலும் தோளிலும் சுமந்த தங்கை "மியூரி"க்கு சமர்ப்பணம். " அண்ணா மீண்டும் வீட்ட வரும்போது என் போட்டோ இந்தச் சுவரில் தொங்கும்" இறுதியாக அவள் என்குறித்து சொன்ன வார்த்தைகள், அதை நிஜமாக்கிவிட்டு சென்றுவிட்டாள். அண்மையில் நான் வீட்டுக்கு சென்றபோது பெரியம்மா என்னை அணைத்துக்கொண்டு "தம்பி உன்ர தங்கச்சி நம்மை எல்லாம் விட்டுட்டு போய்ட்டாள்டா" என்று கதறினார். அதன் பிறகு நாம் நிறயப் பேசினோம், கண்ணீரை துடைத்துக்கொண்டு முகங்களில் பூத்த புன்னகை இது ]

Sunday, July 19, 2009

முகாமில் ஒருநாள்


அண்மையில் வவுனியா நலன்புரிநிலையத்திற்கு குடும்பத்தாரை பார்வையிடச் சென்றிருந்தேன், முட்கம்பிகளாலான ஆறடி உயர வேலியில் காத்துக்கிடந்தமக்களை பார்வையிட காண கூடடமாக மக்கள் இன்னொரு பக்கத்தில் நின்றார்கள். என்னை கவனமாக கூட்டிச்செல்லுமாறு மச்சாள் (என்வயதுதான்) ஒருவரிடம் அத்தான் ஏற்பாடு செய்திருந்தார். அனுமதி கிடைத்தது மடையுடைத்த வெள்ளம்போல் ஓடினோம், சோதனைகளுக்கு பிறகு 15பேராக 15நிமிடம் வரை பார்க்க அனுமதி. அங்கே அப்பாவும் அம்மாவும் தங்கைகளும் காத்திருந்தனர், மகன் வெய்யிலில் வருவான் என்பதற்காக அப்பா கொக்கொக்கோலா குளிர்பான போத்திலுடன் நின்றார், அம்மான் தானே சமைத்த எனக்கு விருப்பமான உணவுப்பொருட்களுடனும் ஒரு பையில் சில பொருகளுடனு நின்றார்கள். அப்பா வேலைக்கு லீவுபோட்டு வந்திருந்தார், தங்கைகள் பாடசாலை போகவில்லை. "பாசம் ஒரு வேதம் பேசடி கிளியே" பேசினோம். வார்த்தைகள் தீராமலே நேரம் தேய்ந்துபோனது. திருப்பி அனுப்பப்பட்டோம். மீண்டும் இராணுவகாவலர்களிடம் போய் பேசினேன், நான் கொழும்பில் இருந்து வருவதாகவும் உள்ளே செல்ல அனுமதிவேண்டும் என்றும்..... சிறிது நேர விவாதத்திற்கு பிறகு உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

உள்ளே சென்று எமக்கு கொடுக்கப்பட்ட கொட்டகைக்குள் சென்றோம். மகிழ்ச்சி முகங்களில் பிரகாசித்தது. அங்கே செல்வதற்கு பணம் என்னிடமிருக்கவில்லை, அப்போது கௌசி அண்ணா, ஒரு தொகை பணத்தை கொடுத்து போய் வீட்டாரை பார்த்துவா எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார். இந்த மனம் இப்போது எத்தனை பேருக்குவரும். அந்தப்பணத்தில் தங்கைகளுக்கும் அப்பா அம்மாவுக்கும் உடைகளும் இனிப்புப் பண்டங்களும் வாங்கிப்போயிருந்தேன். அவர்கள் என்னை பார்த்த சந்தோசத்திற்குமேல் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லையானாலும், அண்ணா வாங்கிக்கொடுத்தது, மகன் வாங்கிக்கொடுத்தது என்று நண்பர்களிடம் காட்டினார்கள்.

நான் எல்லாவற்றையும் மறந்து ஒருநாள் சதோச்மாயிருந்தேன், அம்மா தேறிவிட்டார், தங்கைகள் தேறிவிட்டார்கள், சாப்பாட்டுக்கு குறையில்லை, அவர்கள் பேச்சில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருந்தது. என் அழகுத்தங்கையின் அழகுக் கூந்தலை தவிர, மீட்டு விட்டார்கள் தங்களை. நான் தூக்கி எறிந்த கடவுளை தேடிப்போய் சொன்னேன், இனியும் வேதனைகளை கொடுக்க நினைத்தால் அதை எனக்கே கொடு, இவர்களை விட்டுவிடு, சாவின் குகையிலிருந்து வந்த இவர்களிடம் இப்போது புதிதாக அரும்புகிற மகிழ்ச்சியை பிடுங்கிவிடாதே!

அங்கே எனக்காக நிறைய சாப்பாடுகள், பலாப்பளம். சோடா, கேக், சுவீட்ஸ்! அம்மா அவசர அவசரமாக சமைத்து மத்தியானம் சாப்பாடும்தந்தார்ர், எனக்கும் தங்கைகளுக்கும் தன் கையாலேயே சாப்பாடு தந்தார், அம்மாவுக்கு நாங்கள் மூன்றுபேரும் எப்போதும் இப்படியே பாசமாக ஒற்றுமையாக இருக்கவேண்டு என்றே விருப்பம், அதற்காகவே ஒரு கோப்பையில் சாப்பாடு போட்டு எம் மூவருக்கும் தருவார், அவர் அடிக்கடி சொல்வார் " எப்படி எம்முடையதெல்லாம் உங்களுடையதாகிறதோ அப்படியே உங்களுக்குள்ளும் எப்போதும் இருக்கவேண்டும் என்று" அதன் பொருள் இப்போதுதான் எனக்கு புரிகிறது, எனக்குளேயே நானும் சொல்லிக்கொள்கிறேன் "என்னுடையதெல்லாம் உங்களுடையதே" இந்த ஐந்துபோர் கொண்ட உலகம் எபோதும் இருக்கும் அம்மா.

இந்நாள் வரையிலான என்னது தமிழுக்கும் சிந்தனைக்கும் எப்படி அம்மா காரணமாக இருந்தாரோ அதேபோல என் அறிவுக்கும் ஆழுமைக்கும் பண்புக்கும் பளக்கத்துக்கும் அப்பா காரணமாக இருக்கிறார். அவர் இதுவரை எங்களை கைநீட்டி அடித்ததுகூடக்கிடையாது, குடிப்பளக்கமோ சந்திவளியே வெட்டிப்பேச்சு பேசும் பளக்கமோ ஏன் கடையில் தேனீர் அருந்தக்கூட போகமாட்டார். எங்களுக்ககவே தன் எல்லா உளைப்பையும் சிந்தனையையும் செலவளிப்பவர். எனக்கு இப்போதும் வெளியே போய் ஒரு அலுவல் பார்க்கத் தயக்கம், என் தங்கைக்கு தேநீர்கூட தயாரிக்கத்தெரியாது எல்லாவற்றையும் அவரே செய்துதருவார், இது இன்னொருவருக்கு பிளையாகப்படலாம் ஆனால் அவர் எங்கள்மேல் வைத்துள்ள பாசம், அக்கறை என்பதைத்தான் நாங்கள் உணர்கிறோம். அந்தப்பாசத்தினால்தான் புலிகளால் கொடூரமாகத்தாக்கப்பட்டு சுயனினைவை இழந்து இரத்தவெள்ளத்தில் கிடந்தார், தன் பிள்ளையை கொல்லக்கொடுக்க எப்படி ஒரு தந்தையால் சம்மதிக்கமுடியும் அதனாலேயே அடிபட்டார். இன்னும் பத்துப் பதினைந்து வருடங்களுக்குமேல் எங்களை இருக்கவைத்து சாப்பாடுபோட இயலும் அவரால், அதற்காக அவர் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார். முகாம் மக்களுக்கு தன் பணியை செய்ய ஆரம்பித்துவிட்டார் அப்பா என்று அம்மா சொன்னார். எங்களுக்கு மட்டுமல்லாமல் உதவிகேட்டு வருபவர்களுக்கு சலிக்காமல் உதவுவார். எங்களுக்கு எல்லாமே அப்பாதான், அவரின் அன்புக்கும் அக்கறைக்கும் பதில் என்ன செய்துவிடப்போகிறோம்?

மாலையானது நான் விடைபெற இருந்தேன், என்னை வாசல்வரை அளைத்துவந்தார்கள், அம்மா பிரியமுடியாமல் என்னை அணைத்து முத்தமிட்டா, கடைசி தங்கையும் வெட்கப்படுக்கொண்டே ம்ம்ம் கொஞ்சிளாள், அம்மா சொல்லிவைத்தார் போல. அப்ப எனக்கு கொஞ்சேல்ல? பெரியவள் ஓடிவந்து என் இரண்டு கன்னங்களிலும் ம்ம்ம். "பாசம் ஒரு வேதம் பேசடி கிளியெ

தூரத்தே நான் மறையும்வரை என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த நினைவுகள் போதும் என்னை வாழ்வின் வலிகளில் இருந்து விடுவிக்க

Friday, June 19, 2009

பிரியத்தின் தூரம்


என் மனதில் ஏதோ ஒரு
சுமை ஒன்று
அது நீ
இல்லாததன் வெறுமையை
உள்வாங்கிப் பருக்கிறது
நினையுகள் கூட
தூரத்தே நெளியும்
நிலாவின் பிம்பமாய்
அலைந்துகொண்டிருக்கிறது
ஒருவாசல் திறந்து
ஒரு நேசம் வர
இன்னொரு வாசலால்
நீ போயிருப்பாய் என்று
சாவகாசமாய் இருந்துவிட்டேன்
இப்போதுதான் புரிகிறது
மனம் என்பது
வருவதற்கு மட்டுமே
ஏற்பாடுசெய்யப்பட்ட
ஒருவளிப்பாதை என்று

இப்போதுதான் புரிகிறது
எதை எல்லாம்
நான் அடைந்துவிட்டேன்
என்று நினைத்தேனோ
அதையெல்லாம் அப்போதே
இழந்துவிட்டேன் என்று
எதையெல்லாம்
என்னால் அடையமுடியாமல்போனதோ
அதைஎல்லாம் அடைவதற்காய்
இன்னும் மனம்
போராடிக்கொண்டிருக்கிறது

பெற்றுக்கொண்டவைகளை
விடவும்
பெறத்தவறியவைகளோடே
வாழ்கிறேன் நான்

Tuesday, May 26, 2009

கடிதம்,- அகதிக்கு அகதி எழுதிக்கொள்வது

அண்மையில் இராமனாதன் முகாமிலிருந்து எனது தங்கை கடிதமொன்றை கொடுத்துவிட்டிருந்தாள். அதிலுள்ள அர்த்தங்களை தினம்தினம் தேடுகிறேன், நொடிக்கொருமுறை ஆயிரம் அர்த்தங்கள் அதனுள்ளே, அந்த அர்த்தங்களுக்குள் பல்லாயிரம் வலிகளும் வேதனைகளும் மடையுடைத்து வெள்ளமாகப்பாய்கிறது. இந்த அண்ணன் என்ன செய்வான் தூரத்தே நின்று அழுகிறேன் என் மொத்த கண்ணீரும் தீர்ந்துபோகட்டும் என்று, இன்னொருமுறை இதிலுமொரு துயர் காண்பேனோ என்று..... இப்பொளுதே கொட்டித்தீர்த்துவிட. ஒரு பரம்பரைக்கே போதுமான மொத்த துயரை இப்போதே கட்டிக்கொடுத்துவிட்டது இந்த யுத்தமெமக்கு என்பதை அங்குபோய் பார்த்ததும் உணர்ந்தேன்.

முகாம், இங்கே மனிதர்களை அடைத்துவைத்திருக்கிறார்கள், பூமியில் மிகவும் கொடிய விலங்கு மனிதன் தான் சந்தேகமில்லை, அதிலும் கொடிய மிருகங்கள் இந்த யுத்தததை முன்னெடுக்க காரணமானவர்களும்,அதை தூண்டியவர்களும் இன்னும் அதன்பால் அக்கறை கொண்டோருமே என்பது புரியும், முகாங்களுக்கும்,வைத்தியசாலைகளுக்குமொருமுறை போய்ப்பாருங்கள்.

இந்தக்கடிதம் அந்தத்துயர்களின் ஒரு பருக்கையை எனக்குள் உணர்த்தியது, இதோ அது

o o o o

அன்பின் அண்ணா
நலம்,உங்கள் நலத்திற்கு இறைவன் என்றும் அருள் புரியட்டும்

மேலும் உங்கள் வொய்ஸ் எல்லாம் மாறிவிட்டது. சந்தோசமாய் இருக்கவும். இளம் பராயத்தை சந்தோசமாக செலவளிக்கிற பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நாங்கள் பட்ட கஸ்ட்டங்கள் எல்லாம் வார்த்தைகளில் அடக்க முடியாதவை.எந்தளவிற்கு துயரத்தித்தினை அனுபவிக்க வேண்டுமோ அந்தளவிற்கு அனுபவித்தோம், கஸ்ட்டப்பட்டோம். சரி அது எல்லாம் போகட்டும் அவை மீட்டுப் பார்க்க முடியாத பக்கங்கள். அத்தானையும் அக்காவையும் கேட்டதாகச் சொல்லுங்கள். டேனுவுக்கும் சதுக்குட்டிக்கும் எங்களை அறிமுகம் செய்துவையுங்கள், என்ன செய்வது பாசத்தை கூட பகிருவதற்கு இங்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே. ம்ம் இந்த உலகின் வேடிக்கையை பாருங்கள் விலங்குகள் சுதந்திரமாய் திரிய ஆரம்பித்து விட்ட காலத்தில் மனிதவேட்டை, மனிதர்கள் பட்டியில் (தொழுவம்). இத்தனை நிகள்ந்ததற்குப் பிறகு சாவதற்கு பயமா,,,, உங்களையும் அத்தானாக்களையும் ஒருக்கா பாத்துவிட்டால் போதும் எண்டுதான் இங்க வந்தனாங்கள். இதெலாசொல்லி உங்களையும் காயப்படுத்தவில்லை, நீங்கள் சந்தோசமாக இருங்கோ, உங்கட பிறந்தநாளுக்கு எங்களுக்கு என்ன ஸ்பெசல்! ம்ம் சும்மாதான் கேட்டனான், வளமை போல அண்டைக்கு நீங்கள் உங்கட நண்பர்களோட சந்தோசமா இருங்கோ அதுதான் எங்கட விருப்பம், எங்கட அண்ணா வீட்ட இருந்த சந்தோசத்தோட எப்பவும் இருக்கவேணும்.

வேற என்ன அண்ணா, அம்மா சரியா மெலிஞ்சிற்றா,அவவுக்கு மருந்தும், மாப்பொட்டியும் வாங்கி கொடுத்துவிடுங்கோ. உங்களை பார்க்கவேண்டும் போல இருக்கு,சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருக்கா வாங்கோ. படிக்கிற ஆர்வமும், ஊக்கமும் இருக்கிறபோது A/L Exam எழுதமுடியாமப் போய்விட்டதே எண்டுதான் கவலை, இப்ப கூட சந்தர்ப்பம் கிடைத்தால் திரும்பவும்படிச்சு எழுதலாம், அதெல்லாம் எம்முடைய கையில் இல்லையே, நடப்பதை பார்க்கலா. ம்ம். சரி அண்ணா, நாங்கள் விரைவில் சந்திப்போம்,நீங்கள் நலமாக இருக்கவும், எனக்கு தலைமயிர் வளரும் வரம்வேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கோ.

நன்றி
இப்படிக்கு
தங்கை

o o o o


எனது
மிகத்துயரமான வரிகள்
மௌனமாகவே இருக்கின்றன
ஒருபிடி
அர்த்தங்களேனும் அடங்கா(த)
சொற்கள் சிலது
முட்கம்பிகளில்
பிடித்து நிற்கின்றன

மரணத்தை விடவும்
கொடியதோர் இரணத்திலிருந்து
மீண்ட வேதனையை
என் கரங்களில்
புதைந்தழுத
என் தாயின்
கண்ணீர் சொன்னது

இன்னும்
முடியவில்லை துயரம்

அம்மா அழுது தீர்த்துவிடாதீர்கள்

பருவம் பருவமாய்
அழிக்கப்படுகிறவர்கள் நாம்
மறந்துவிடாதீர்கள்

Tuesday, May 12, 2009

அகதியின் பிறந்தநாள்

பிக்னிக் கொட்டகைத் தூக்கம்
விழித்தால் சுர்றவர திருவிளாக்கோலம்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கூட்டம் கூட்டமாய் சன நெரிசல்
தொலைதூர
முட்க்ம்பி வேலிகளில்
ஐந்து நிமிட தரிசனத்திற்காய்
காத்துக்கிடக்கும் மக்கள்
சுற்றவர துப்ப்க்கிகளோடு
காவலர்கள்
உலக நாடுகளின்
பிரதிநிதிகளின் வாகனங்கள்
பரிசுப்பொருட்களோடு
அணிவகுப்பு ஆரம்பமாகிறது

புன்னகையோடு விடிகிறது நாள்
ஒரு அகதியின்
பிறந்தநாள்
சிறப்பாகத்தானிருக்கிறது

Saturday, April 11, 2009

நான் ஒரு சிறைக் கைதி


நான் ஒரு சிறைக் கைதி
யாரும் தீர்ப்பிடாத
குற்றங்களுக்காக
கம்பிகளே இல்லாத கூண்டொன்றில்
அடையுண்டுகிடக்கிறேன்
எனக்கு தீர்ப்பெழுதக்கூடிய
அந்த நீதிதேவன்
வருவான் எனச்சொல்கிறார்கள்
என்னை இங்கிருந்து மீட்க
அவன் வருவதற்கான
அறிகுறிகளேதுமில்லை
இதுவரை வந்ததுமில்லை
நானும் கூடவே
சேர்ந்து தேடினேன்
அவன் முகவரியாவது சிக்குமென்று
பல ஆண்டுகள்
தேடியதில்
இறுதியாகக் கண்டுபிடித்தேன்
அவன் வீட்டுக்கான
சில நூறு முகவரிகளில் எதிலும்
அவன் இல்லை என்று

இறுதியாக
நானே எழுதினேன்
எனக்கான தீர்ப்பை
நான் சுமந்துகொண்டிருக்கும்
காரணங்களற்ற குற்றங்களை
தள்ளுபடிசெய்துகொண்டு
"உலகம் தண்டிக்கப்படக்கூடியது"
என்று

Saturday, March 21, 2009

நிறங்களில்லாத முகத்தின் புன்னகை


பூமி தன்மீது
பூசிக்கொண்ட வர்ணங்களால்
மேனி பூசிக்கொண்டு
அடையாளம் காட்டுகிறேன் - நான்
எனது நிறங்களிலிருந்து
வேறுபட்டுக் கலைகிற
முகங்களில்
என் நிறங்களை
பூச முனைந்து திரும்புகையில்
நிறங்களற்ற பிறிதொரு
வெளியை என்னுள் உணர்கிறேன்
கூடப் பயணிக்கிற
தனிமையின் நான்கு சுவர்களில்
தெறித்து நெழிகிற
என் உணர்வலைகளினின்று
மொழி தொடாதவோர்
அர்த்தம் விளங்க
என்னில்
வளர்ந்து நிற்கும்
கனவு விருட்சங்கள்
மறைந்துபோக
நிலத்தில் விழுந்துகிடக்கும்
எனது நிழலின்
நியாயம் புரிகிறது

என் வாழயியலாத் தருணங்களில்
சுமந்த எண்ணங்களை
அறுத்தெறிந்து வெறுமையாகையில்
சூரியனைவிடவுமோர் ஒளி
என்னுள் பரவுகிறது
அப்போதான எனது
புன்னகை
பகட்டுப் பகல்களையும்
எரித்துக்கொண்டே வளர்கிறது

Monday, March 16, 2009

இறந்தபின்னும் வாழ்வோம்


நாங்கள் எப்போது
வேண்டுமானாலும் கொல்லப்படலாம்
எங்களையும் கடந்து
யுத்தம் போய்க்கொண்டேயிருக்கும்.
இதுவரை விழுந்த
பிணங்களைப் போலவே
நாங்களும்
அனாதைகளாய்க் கிடப்போம்
அப்போது
ஏதோ தேசத்திலிருக்கிற
எங்கள் உறவுகளுக்கு
செய்தி சொல்லி
அனுப்பப்படமாட்டாது

நாங்கள்
இருக்கிறோமோ இல்லையோ
என்பதற்கு தடயங்களேதும்
அப்போதிருக்காது
அந்த தேசத்திலிருந்து
எங்களுக்காக
மகனோ, மகளோ
தாயோ, தந்தையோ
காத்துக்கொண்டிருக்கலாம்
நாங்கள் எங்கேனும்
இருக்கலாம் என்ற
நம்பிக்கையோடு

எங்களையும் தொடர்ந்து
ஒருவேளை
எஞ்சியிருக்கிற உயிர்களெல்லாம்
பிணங்களானபிறகு
அமைதியடையலாம்
இந்த தேசம்
அபோது இந்த
சுதந்திர பூமியில்
பிணவாடையோடு
மலரும் பூக்கள்

Saturday, March 14, 2009

அன்புத் தம்பி அன்பழகனுக்காக- ஆத்துமத்திலிருந்து இறுதி வார்த்தை

அன்பு என்கிற வார்த்தை
உதடுகளில் மட்டும் உயிர்ப்படைவதாகச் சொல்கிறார்கள்
நான் நேசித்தவர்களில் நீயும் ஒருத்தன்
அப்படியானால்
எனது நேசத்தை
என்னவென்று எழுதுவேன் நான்

அன்பனே
உலகை நேசித்த மனிதன் - அதை
அழித்து அழகாக்கியதன் எச்சம்தான்
இப்போதிருக்கும் மரண பூமியாம்
உறவுகளை நேசித்த மனிதன்
பிழவுகளை மட்டுமே பிரசவித்தான்
அதனால் என்னவோ
நமக்குள் மலர்ந்த நட்பு அளவாகவே இருந்தது
அதிகமாகவே நேசித்தேன் நான் - உன்னை

உனதண்ணனின்
நண்பன் என்பதற்காய்
மரியாதை என்ற பெயரில்
ஐந்தடி தூரத்தில்
நின்றன உனது வார்த்தைகள்
எட்டத்தில் நின்றது
நமது உறவு
அதன் முளுஅழகும் இப்போது
எனக்கு விளங்க வைத்து
எட்டாத வானுக்கு விரைந்ததாம்
உன் உயிர்ப் பறவை

தம்பி
இந்த அண்ணன்களுக்கு முன்னமே
ஆகாயம் பிளந்து
சுவர்க்கம் போய்விட்டாயாமே
இப்போது
என்னுள்ளே புரள்வது
குற்ற உணர்வா,
துரோகமா,
வஞ்சகமா - இல்லை
உன்னைப் பிரிந்த
வேதனையா புரியவில்லையடா

உனக்கு நாட்டம் இல்லாதுபோனாலும்
நான் எழுதியதற்காய்
இரண்டுதடவை
புரட்டிவிட்டுச் சொல்வாய்
"நல்லாயிருக்கு கவிதை" என்று
நானும் ஒரு புன்னகை ஒன்றைத் தருவேன்
என்மீதிருந்த உனது நேசத்துக்காக

இன்னொருமுறை
நீ எனக்குச் சொன்னாய்
" அருள் அண்ண இந்தமுறை நீங்க போறீங்க மொறட்டுவ கம்பச்சிற்கு அடுத்தமுறை நான் அங்க வாறன் பாருங்க" என்று
நான் காத்திருந்த அந்த ஒரு வருடத்துக்குள்
உனக்கு கம்பஸ்சும் கிடைத்தது
நீவரவேண்டிய பாதைதான் மரணித்துப்போயிருந்தது

பிறகுதான் சொன்னார்கள்
உன்னையும்
பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று

உலகம் முளுக்க
இருக்கிறான் தமிழன்
ஈழத்திலிருந்து தப்பியவனெல்லாம்
சிங்கார வாழ்க்கை வாழ்கிறான்
சிறீலங்காவில் இன்னும்.
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும்
மாட்டிக்கொண்டவர்கள் மட்டுமே
பலிகடாவா
இங்கே யாருக்கடா வேண்டும்
தமிழீழம்

ஒரு விடுமுறையில்
இந்த அண்ணன் வீட்டுக்கும்
வந்தாயாம்
எந்தாய் உன்னை உச்சிமோர்ந்து
கண்கள் கலங்கியதை
எனக்குச்சொன்னாள்
தன் பிள்ளைபோல் உணர்ந்ததாய்

அப்போதே
என்கண்கள் பனித்து
எனக்குள்ளே சுரந்த பாசம்
இன்னும் என் அடினெஞ்சில்
தேங்கினிற்குதடா

நீயிருந்தால்
திருவிளாவைப்போல் கலகலப்பாயிருப்போம் நாம்
அந்த நினைவுகள் வந்து என்னைச்
சித்திரவதை செய்யுதடா

தம்பி
இன்னொரு பிறவி இருக்குமானால்
மீண்டும் சந்திப்போம்
இங்கு வேண்டாம்
யுத்தமே இல்லாத ஏதேனுமோர்
தேசத்தில் (கிரகத்தில்)

Sunday, March 8, 2009

சாக்கடையில் மிதக்கும் புன்னகை


அசுத்தமாகிவிட்டது
எனது பேனா
என் இனிய மனிதர்களை
பிரிந்து பிரிந்து
பிழந்துகொண்டு பாய்ந்த
அத்தனை பரிவும்
தீர்ந்தபின்
பொய்யெழுதி வடிகிற
வார்த்தைகளின் வாடைகளோடு
சமரசம் செய்துகொண்டிருக்கிறது
என் பேனா
புத்தகத் தாழ்களுக்குள்
ஒழித்துவைத்த
பிரியங்களையும் துயரங்களையும்
எரியூட்டி
சாக்கடை கால்வாயில்
கரைத்துவிட்டு
பெருமூச்செறிகிற வேளையிலும்
இருதயத்தில்
அறைந்துகொண்டிருக்கிற அந்த
உணர்வினெச்சத்தை இன்னும்
நிறுத்தமுடியவில்லை

வீதியில் இறங்கும்போது
ஏற்றிய
நறுமணம் வீசும் ஒரு புன்னகை
வீடு திரும்பி
கழற்றி மாட்டுகையில்
பலமாகச் சிரிக்கிறது
புறங்கையில் நனைகிற
ஒரு துளி
கண்ணீரைப் பார்த்து

Tuesday, March 3, 2009

நடை பிணம்


நான் மட்டும்
மிச்சமிருக்கிறேன்
என் வாழ்வு பிடுங்கப்பட்டு
தெருக்குப்பையில்
கிடக்கிறது.
நெஞ்சில் இருந்து
நாருரித்தும்
உணர்வுகள் பீறிடாதபடிக்கு
உள்ளத் தீயில்
உணர்வுகள் காய்ந்துவிட்டன.

கடைசியாக
ஒரே ஒரு தடவை
எனக்காக அழக் கூட
கண்ணீரில்லை என்னிடம்…
கனவு வாழ்க்கை எல்லாமும்
கண்ணீரிலே மூழ்கிவிட்டன.
மூச்சுத்திணறி
செத்துக்கிடக்கிறது
எத்தனையோ பேரின் எதிர்காலம்…

ஒருவேளை
இன்னும் சில நாட்களில்
அல்லது
அதற்கு பிறகோ
என்னிடமுள்ள
சூழல் மீதான நியாயங்களையும்
அதன் மீதான
நம்பிக்கையையும் கூட
நான் இழந்துபோகலாம்

இப்போதான
என் வருதம்
உணர்வுகளை காக்க இயலாது
ஓர் உடம்பிருந்து
என்னபயன்

Friday, February 13, 2009

காதல் நடந்த சுவடு


பதினாறு வயது, அந்தப் பருவம் பருகப் பருக விடாய் எடுக்கும். தனிக்கத் தனிக்கத் இனிக்கும். தவமிருந்தாலும் ஒரு சொட்டும் கிடைக்காத தேவாமிர்தம் அந்த நாட்கள். இளமை, அதன் முதற் பகுதி எனக்குள் உணர்வெழுதிப்போன சுவை, தடவிப் பார்க்க தளும்புகளாய் கூட இல்லை இப்போது என்னிடம்.

உணர்வுகள் சுரந்து சுகம் நிரம்பி வழிந்த தேகத்துக்குள் திட்டுத்திட்டாய் கனவுகள்.

கடவுள் பத்திரம் என்று சொல்லித்தான் கொடுக்கிறான் வாலிபத்தை, சிலர் அதை திறந்தே பார்ப்பதில்லை, வாழ்வு தொலைந்து விடுமோ என்கிற பயத்தில். அந்த உனர்வுகள், அடக்கி அடக்கி வைத்து.... பின்னொரு பொழுது உடைத்து வெளிவரும் கேவலமான பெயரோடு. இன்னும் சிலர், பொக்கிசம் கிடைத்ததென்று அதிலிறங்கி ஆடி அடங்குவர்.

பகுதி 1

என் கையிலும் வாலிபம் கிடைத்தது. அதை திறக்கிற துணிவு கூட இல்லை அப்போது என்னிடம். ஆனாலும் திறந்து பார்க்காமலுமிருக்க மனம் கேட்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அடியெடுத்து வைத்து கதவுவரை வந்தாயிற்று. கூச்சம், வெட்கம், பயம் இன்னும் தயக்கமும் கூடவே என்னோடு வந்தன. என் கழுத்துப் பிடியில் வாலிபத்தின் முன்னோடிகள் - ஹோமோன்கள் சொல்லச் சொல்ல துணிந்தது மனம். மெல்ல நிமிர்ந்து அவள் முகம் பார்த்தேன், திறந்தது கதவு. அவள் கண்களைப் பார்த்தேன், பிறந்தது காதல்.

காதலினுள் காலடி வைக்க வைக்க வானமும், பூமியும், பூக்களும், நதியும் அழகயிற்று. பகல்கள் எல்லாம் அவள் வருகைக்கான காத்திருப்பாயின. இரவு வந்ததும் அந்த இருட்டில் ஒழிந்துகொண்டு நிலவில் அவளை வரையத்தொடங்கினேன். நிலவு கவிதையாயிற்று. நீரும் நதியும் சங்கீதமானது. அவள்- அந்த தேவதை என் வாலிபத்தின் இளவரசியானாள்.

பகுதி 2

காதல் பாடம்
ஆயிரம் கோடி பழைமையான பூமியில் அதே வயதான காதலை இந்தப் பூமி - தன்மீது எழுதிவைத்த ஈரமான வார்த்தைகளால் எனக்கு அறிமுகம் செய்தது. அமீபா என்கிற ஒற்றை எழுத்தால் எழுதப்பட்ட பூமிதான் இன்று மேனிமுளுக்க உயிராயிருக்கிறதுகாதல்

காதலுக்கு
வயது, கண், மொழி, மதம்
இப்படி,
கிடையாது என்று அடுக்கப்பட்ட
சொற்களுக்குள்
எதுவுமே கிடையாமல்
வெறுமையின் விலாசமாக
இல்லாத்தன் இருப்பாக
இருக்கிறது காதல்

கடுகளவு தடையங்களையும்
காட்டாமல்
காற்றுக்குள் மணம் போல
கலந்திருக்கிறது காதல்

சிலவேளை
இல்லாத வானுக்கு
நிறம்போல
வண்ணம் பூசி
மனசில் முகம் காட்டுகிறது
காதல்

இப்படித் தொடர்ந்த பாடத்தில், என்னிடமிருந்த உனக்கான முகவரி

பதினாறுவயது
பருகிய விழிகளில்
இயற்கையில் பாடம் படித்து
நரம்புகள் வடம்பிடிக்க
சவாரிசெய்த
கனவுகளின் - நிஜக் கனவே
நீ

அப்படியே கனவு போலவே
இருந்தாயா - நீ
இல்லை என் கனவை
திருத்திக்கொண்டேன்
உன்னைப் பார்த்து,
உன்னளவிற்கு அழகியல்
வசதி போதாது
என் கனவுகளுக்கென்று

பகுதி 3

எனக்குத் தெரியும், மோகினிகள் கூட தேவதைகளாக சித்தரிக்கப்படும் வாலிபம் மாய மனச்சோலை என்று. இவள் வேறு சிதையாத சித்திரம். கனவில் இருந்து நிஜத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட சிம்ரெல்லா. எப்படி இரண்டு விழிகளில் இந்த அழகை ஏந்துவது. பார்த்த பார்வையில் உள்ளே குத்தி இற ங்கி உயிருக்குள் உளவுபார்க்கிறது இரண்டு கருவிழி நிலவுகள். வானுக்கும் தரைக்குமிடையில் ஆதாரமில்லாமல் அலைகிறது மனசு. நாடி நரம்புகளில் அவசரத்தந்திகள் அடிக்கடி பறக்கும்

இத்தனைக்கும் காரணம் அவளும் என்னைப் பார்த்தாள்

என் கிறுக்கல்கள் கவிதையாய் மறுபிறப்பெடுத்தன. என்னக்குள்ளும் சுரந்தது இசை. நானும் கவிஞனாகிவிட்டேன், இல்லை இல்லை என்னையும் கவிஞனாக்கிவிட்டாள் ஒரு தேவதை. அந்தப் பார்வையை இப்படி எழுதினேன்.

"சொட்டுகிற மழை
கிழியாத வானம்
எப்போதும்
தொலைந்து கொண்டேயிருக்கிற
முகில்கள்
வானத் திரையில்
நட்சத்திர ஆணிகள்,
அடித்து மாட்டிய
நிலவின்
நகரும் சித்திரம்
அத்தனையும் அழகாயிற்று
உன் ஒரே பார்வையில்

எப்படிச் சொல்ல
என் கண்மணிக்குள்
நீ செய்த கதிரியல்
வைத்தியத்தை
என் நரம்புகளுக்குள்
என்னென்ன
இரசாயனம் கலந்தாயோ
மேனிப் பரப்பெங்கும்
ஒராயிரம்
மின் அஞ்சல்கள்"

பகுதி 4

காதலுக்கு வயது - ஒன்பது.
[ஆண்டுக் குறிப்பிலிருந்து]
1999 காதல் ஜனனம்
2000
2001 பார்வைகளோடும் கனவுகளோடும்
2002 காதல் வளர்ந்து எனக்குள் மரமாகி
2003 எம்மை பிரிக்கவந்த சாத்தான் கல்லூரி இருதிப் பரீட்சை. நம் கல்லூரியின் இறுதி பிரியாவிடை ஒன்றுகூடல் அழைப்பிதளில் நான் எழுதியது எம்மையும் குறித்துத்தான்.

"கண்களில்
கோடி கனவுகள் சுமந்து
கூண்டை விட்டு
கலைகிற (கலைக்கப்படுகிற)
கல்லூரிப் பறவைகள் நாம்
பிரிந்துசெல்கிறோம்"

"கலைக்கப்படுகிற" என்றுதான் எழுதிக்கொடுத்திருந்தேன், அதை திருத்தித் தருமாறு மீண்டும் என்னிடம் அனுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலாகவே " கலைகிற" என்ற சொல்லை சேர்த்திருந்தேன்

உண்மையில் நாம் கலைக்கப்படோம், நட்போடும் காதலோடும் சேர்த்து. அதுதான் நமக்கான இறுதி நெருக்கம். அதற்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் என்னில் இருந்து தூர விலகிக்கொண்டேயிருந்தாய் நீ. பிறகு காலச் சுழலில் அகப்பட்டு நீயும் நானும் ஏதேதோ திசைகளில் வீசப்பட்டோம். அங்கேயே நின்றுவிட்டது எனது உலகம்.

அதற்குப் பிறகு, கொஞ்ச நாள், பிரிவுத்துயரில் பிடிபட்டு... ஞாபகங்களை பிரியமுடியாமல்... கொஞ்சம் மறந்து, கண்கள் பனிக்கும் நினைவுகளுடன் அவ்வப்போது...

அப்போதெல்லாம் எழுதியது
1
யாருமே இல்லாத
ஒரு உலகத்திற்கு
என்னை கைபிடித்து
அழைத்து வந்துவிட்டு
பாதியில் மறைந்துவிட்ட
பரலோக தேவதையே
என் மீதி வழி சேர்வதெப்படி
இல்லை
இங்கிருந்து மீழ்வதெப்படி

2
பருவகாலம்
தீர்ந்தபின்
திரும்புகிற பறவை போல
பிரிந்து செல்கிறாய்
என்னில் இருந்து - நீ
தங்கியிருந்த உன்
தடங்களை கலைத்து
அப்படியே போட்டுவிட்டு

3
நீ என்
அருகிலிருந்திருந்தால்
உன்னைத்தவிர
வேறெதையும்
நான்காம் பட்சமாய்
துரத்தியடித்திருப்பேன்
இதுபோல எண்ணும் போதெல்லாம்
உன்னைத்தவிர வேறொருத்தியை
பார்வையிருந்து
மனதிற்கு அழைத்துச் செல்கையில்
வாசலில்
வழிமறித்து நிற்கிறாய்
நீ


4
உன்னிடமென்றால்
இந்த ஜென்மத்தில்
மட்டுமல்ல
இன்னும்
எத்தனை பிறவியிலும்
தோற்றுப்போவேன்
அப்போதுதானே
இன்னொரு ஜென்மத்திலும் உன்னை
எதிர்பார்த்தபடிவே
இறக்கமுடியும்

இப்படி பாதியில்
நின்றுபோகிற வார்த்தைகளில்
மீண்டும் உன்னிடம் தொலைத்துவிடுகிறேன்
என் சொற்களை

இன்றுவரை
ஒருதரம் கூட
சொல்லத்தெரியாத
என் காதலை....

அதன் சுகத்தை
நான் அனுபவிக்கிறேன்

நீயே வைத்துக்கொள்
சொல்லாத உனது பதிலை

இறுதியாக

எந்தச் சிலுவையில்
என்னை அறைந்தாலும்
காதலில் உயிர்பெற்று
வருவேன்
அன்பே
அடுத்த ஜென்மத்திலாவது
காத்திரு

Saturday, January 24, 2009

மலையடி வாசிகள்


பூமி தன்
புறமுதுகை உதறிக்கொண்டு
புரண்டு படுத்தது
வானில் இருந்து
சூரியன் ஓங்காளித்த
தணற் திரள்கள்
தரை மேல் விழுந்து
பொருமின
அரணாய் நின்ற
சுவர்களில் இருந்து
உயிர் வளிந்துபோக
அசுர பூதமொன்று
அசைந்துகொண்டிருக்கிறது
எஞ்சிய
துளிகளை எல்லாம்
சிலுப்பி எறிந்தபடி.
சரிந்துபோன
மலையின்
பாறைகளைச் சேர்த்து
தூக்கி நிமிதிவிடலாம்
என்கிற முனைப்போடு - தங்கள்
முதுகுகளை சொருகியபடி
உந்தும்
அதன் இடைவெளிகளுக்குள்
ஓடி ஒளிந்துகொண்டன
அதன் அடிவாரத்தின் மீதிருந்த
ஜீவராசிகள்
இராட்சத பூதம்
திசைகளெல்லாம் சேர்த்துக்கொண்ட
பெருமேனி சிலிர்த்தபடி
எழுகிறது
ஒரே மூச்சில்
மலையை அமுக்கித்த்
தள்ளிவிடலாமென....
அதன் சத்தங்களுக்குள்
மௌனித்துப் போயிருக்கிறது
சாவின் குரல்

Tuesday, January 13, 2009

சாத்தான் தின்னும் நகரம்


பரலோகத்திலிருந்து
தேவதைகள் வெளியேற
பிசாசுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன
புனித வாசலெங்கும்

தெருவழியாக
இழுத்துப்போய்
சூரியனைக் கொன்றுவிட்டு
திசைகளெங்கிலும்
வௌவால்களை தொங்கவிட்டு
விழாக்கோலம்
சூடுகிறது தேசம்

ஒருபோதும்
எழமுடியா பாதாளத்திலிருந்தும்
இன்னும் துரத்திக்கொண்டிருக்கின்றன
நரபலிவாசிகள்

முடிவிடம்
தெரிந்த ஒரு
தூரத்திற்கு
முடிவு தெரியாமல்
ஓடுகிறார்கள்
தம் தேசத்தினின்றும்...
ஆனைஇறாஞ்சிகள் தின்ற
உறவுகளினதும்
பிள்ளைகளினதும்
இரத்த வாடைகளினூடும்...

ஜபங்களாலும்
வேண்டுதல்களாலும்
நிறைந்துபோன
இரட்சணிய பூமி
இரணியம் புரள..
வானிலிருந்து
வரங்கள் வருமென்று
நம்பியிருந்தவர்கள்
தங்கள்மீது செய்யப்பட்ட
சாபங்களை
சுமந்தபடி நடக்கிறார்கள்

சிறைப்பிடிக்கப்பட்ட அழகி
முன்
இரத்தமும் சதையும் படைத்து
சாவோடும் அவலக்கிலிகளோடும்
வென்று
சாம்ராச்சியமேறுகிறான்
சாத்தான்

Monday, January 5, 2009

என் ஒருவனுக்குள்

வசதியாய்
அகதியானேன் - வழியிலே
வழிப்பறி
தெருவெலாம் நீ
மலர்த்திய இராணுவம்,
என் சுதந்திர
தேசமெல்லாம் கைப்பற்றி
எனை வென்று கைதியாக்கி
சிறைக்கெய்தினாய்

நீ எனக்கு
திறந்து விட்ட - என் கனவுகளின்
பூ வனத்தில் - உன் காவலர்
துப்பாக்கி
பூக்களை அறுவடை செய்கின்றது.
என் இருதய இருதயம்
வேகம் பிடித்து
மூச்செறிகிற சுருதியில்
காற்றை சூடாக்கி
நீ சுகம் காண்கிறாய்.
அடுத்து
எனன செய்யப் போகிறாய்.
எல்லாமும் இழந்து விட்டவனிடம்
இன்னும் என்ன
தேடுகிறாய்.
எத்தனை முறை
அழிக்கப்பட்ட பிறகும்
மீண்டுவரும்
சூட்சுமத்தை தவிர
அத்தனையும் நாம் இழந்துவிட்டோமே

இப்போதெல்லாம்
ஒவ்வொரு
தெரு முனை கடக்கிறபோதும்
ஒலி பெருக்கி பொருத்தி
என் ஒருவனுக்குள்
ஒலிக்கிற
உயிரின் ஓசை - நீ
மரணம் அல்லது ஜனனம்
எது வென்று தீர்மானிக்கிற
உன் விழி வீச்சின்
சோதனைச் சாவடியில்....