Wednesday, July 22, 2009

போலிப் புன்னகை


வலிகள் வடியாத
துயரப் பேளை ஒன்று
என் தோழ்களை
எப்போதும் அழுத்திக்கொண்டிருக்கிறது
வேணிலின் ஸ்பரிசங்கள்
ஏதோ ஒரு தூரத்திலிருந்து
எனக்குள் கிளர்ந்தெளும் ஞாபகங்கள் - அவை
மரணித்துப்போய்விட்ட
அதன் நிஜத்தை எனக்குள்
ஏற்க மறுக்கின்றன

மீண்டும் எனக்கு
கொய்யக் கிடைத்த புன்னகைகள்
குறைகளோடும் காயங்களோடுமிருந்தன
பூக்கள் தம் காயங்களை
மறைத்துக்கொண்டு
முகம்காட்டி சிரித்தன
ஆனாலும் அவற்றின்
வாசனையில் மரணவாடையிருந்தது

கிளைகள் ஒடிந்தபின்னும்
மரங்கள் பூக்கின்றன
காய்க்கின்றன
எல்லாம் சரியாகிவிடும்
வடுக்களைத் தவிர.

[ இந்தக் கவிதை நான் கைகளிலும் தோளிலும் சுமந்த தங்கை "மியூரி"க்கு சமர்ப்பணம். " அண்ணா மீண்டும் வீட்ட வரும்போது என் போட்டோ இந்தச் சுவரில் தொங்கும்" இறுதியாக அவள் என்குறித்து சொன்ன வார்த்தைகள், அதை நிஜமாக்கிவிட்டு சென்றுவிட்டாள். அண்மையில் நான் வீட்டுக்கு சென்றபோது பெரியம்மா என்னை அணைத்துக்கொண்டு "தம்பி உன்ர தங்கச்சி நம்மை எல்லாம் விட்டுட்டு போய்ட்டாள்டா" என்று கதறினார். அதன் பிறகு நாம் நிறயப் பேசினோம், கண்ணீரை துடைத்துக்கொண்டு முகங்களில் பூத்த புன்னகை இது ]

3 comments:

நட்புடன் ஜமால் said...

பூக்கள் தம் காயங்களை
மறைத்துக்கொண்டு
முகம்காட்டி சிரித்தன
ஆனாலும் அவற்றின்
வாசனையில் மரணவாடையிருந்தது]]


வார்த்தைகள் அருமை, வலியோ கொடுமை.

kuga said...

/கிளைகள் ஒடிந்தபின்னும்
மரங்கள் பூக்கின்றன
காய்க்கின்றன
எல்லாம் சரியாகிவிடும்
வடுக்களைத் தவிர./

புரிந்து கொள்ள வேண்டிய வரிகள்....

அன்புடன் அருணா said...

வலியை வார்த்தைகளில் நன்றாகக் கொண்டு வர முடிகிறது உங்களால்...