Saturday, September 13, 2008

மறு அழைப்பு - சிங்களத்திலிருந்து

ஐ.நா வே வெளியேறு
ஆட்டு மந்தை போல்
மனித உயிர்
வேட்டையாடப் போகிறோம்

களவு களவாய்
கொன்று - அந்த
ருசி வேகம் கொண்டுவிட்டோம்
பொய்யாடை களைந்து
மெய்யாகவே மேயப்போகிறோம்
புரிந்துகொண்டு விலகிவிடு

புலி வேட்டை என்று போய்
எம்மையே பலிகொடுத்த
பாவம் கழுவப்போகிறோம்
கொஞ்சம் கொஞ்சமாய்
தின்று - தமிழனுக்கு
துயரம்தான் கொடுத்தோம்
இப்போதாவது
நின்மதி தர இடம்விடு
நித்திய அமைதி
அவன்
நேசித்த நிலத்திலேயே
நீறாகட்டும்

இதுவரை யாரும் செய்யவில்லை
சாட்சியத்தை அகற்றிவிட்டு
சத்தமில்லாமல்
முழுத் தமிழனுக்கும்
சங்கூத
யாருக்கும் தோன்றவில்லை

நாங்கள் செய்யப்போகிறோம்

வெள்ளைத்தோல் தோழா
அடிக்கடி நீ
எம் கள்ளம் கண்டுபிடிக்கிறாய்
நாய்க்குட்டி புண்பட்டாலே
அழுகிறவன் நீ
இந்த அக்கிறமங்கள்
சகிக்காது உனக்கு
அங்கிருந்து வந்துவிடு
சாராயமும் சொகுசு வீடும்
தருகிறோம்
இங்கிருந்து
எங்கள் கத்திக்கு காவலிரு
கொஞ்சக்காலம்

No comments: